பதிவு செய்த நாள்
22 ஏப்2020
03:06
புதுடில்லி : நினைத்துப் பார்க்காததெல்லாம் நடக்கும் காலமிது. கச்சா எண்ணெய் விலையும் இதில் விதிவிலக்கல்ல. நேற்று முன்தினம், அமெரிக்காவின், டபுள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு, மைனஸ் 40.32 டாலராக சரிந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வேண்டும் என்று கேட்டால், எண்ணெயையும் கொடுத்து, அதை வாங்கியதற்காக, கையில், 40 டாலரும் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.
ஸ்தம்பிப்பு
நாம் வாங்கும் எண்ணெய், பிரென்ட் கச்சா எண்ணெய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெட்ரோல் இல்லையென்றால் எல்லாமே ஸ்தம்பித்துவிடும் அள்வுக்கு உலகம் சென்று விட்ட நிலையில், இப்போது சரித்திரம் தலைகீழாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சரிந்து, அதலபாதாளத்தை தொட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரை ஒட்டி, 1946ம் ஆண்டில் ஏற்பட்டதற்கு பின், இப்போது தான் இப்படி ஒரு விலை சரிவை சந்தித்திருப்பதாக சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற, இறக்கங்கள் சகஜமான ஒன்று தான் என்றாலும், இப்படி ஒரு நிலை ஏன் ஏற்பட்டது?தேவையில் ஏற்பட்ட சரிவு தான் இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளால், விலை சரிய துவங்கியது. 60 டாலர் வரை விற்ற எண்ணெய் விலை, 20 டாலர் அளவுக்கு சரிந்தது. இந்நிலையில், எண்ணெய் உற்பத்தி மிகவும் அதிகரிக்கவும், அதே சமயம், அதை பயன்படுத்துவாரின்றி தேவை குறையவும், விலை சரிவு நிகழ்ந்துவிட்டது. தற்போது சரிவடைந்திருக்கும் விலை, மே மாத முன்பேர ஒப்பந்தத்துக்கானதாகும். பொதுவாக, கச்சா எண்ணெயை வாங்கி விற்கும் வர்த்தகர்கள், ஒப்பந்த காலமான மூன்று மாதத்துக்குள் அதை விற்று ஆதாயம் அடைய முயற்சிப்பர்,இந்த மே மாதத்துக்கான ஒப்பந்தம், கடந்த 21ம் தேதியிலிருந்து காலாவதி ஆகிறது.
ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில், சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுவிட்டது. குறைக்க முடிவுஉற்பத்தியாளர்கள் அதிக அளவில் எண்ணெயை உற்பத்தி செய்துவிட்டதால், அதை சேமிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், கையில் வைத்திருக்க முடியாமல் விலை குறைத்து விற்கத் துவங்கினர்.உற்பத்தியாளர்களைப் போலவே வர்த்தகர்களிடமும் சேமிக்க முடியாத நிலை இருந்த காரணத்தால், விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றது.இது, மே மாதத்துக்கான நிலவரம் தான். ஜூன் மாதத்துக்கான ஒப்பந்தம், ஒரு பேரல், 20 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
இதன் விலையும் சரியுமா என்பது இனி தான் தெரிய வரும்.டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை சரிவு, நாம் பயன்படுத்தும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலையிலும் ஏற்படுமா என்பதையும் உறுதியாக சொல்லமுடியாது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்கும் வகையில் அண்மையில், பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும், கூட்டணி நாடான ரஷ்யாவும் இணைந்து உற்பத்தியை குறைப்பது என முடிவு எடுத்துள்ளன.இதனால், நாம் வாங்கும் கச்சா எண்ணெய் விலை மேலும் சரியுமா என்பதை இப்போதே சொல்ல இயலாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்;
இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மட்டுமே நிச்சயமாக சொல்ல முடியும்.தயாராகும் செபிசர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தக ஒப்பந்தம், மைனஸ் என்ற நிலைக்கு சென்றாலும், இந்தியாவின் கமாட்டிட்டி சந்தையான, எம்.சி.எக்ஸ்., இடைக்கால தீர்வு தொகையாக, ஒரு பேரலுக்கு, 1 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இது பெரிய வர்த்தகர்களின் இழப்பை தடுக்கும் என சொல்லப்படுகிறது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியும் தேவையான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
விலை குறைவு அமெரிக்க கச்சா எண்ணெய் விலை சரிவை அடுத்து, இது குறித்து, நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளதாவது:இது ஒரு வரலாற்று சம்பவம். கச்சா எண்ணெய் இப்போது ஒரு பாட்டில் கோக்கை விட மிகவும் குறைவு. இப்படி ஒரு சரிவும், கொரோனா வைரசும் வரும் என, நான் என் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்த்ததில்லை.இவ்வாறு அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். தற்போதைய நிலைநேற்று டபுள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை, 99.23 சதவீதம் மீண்டு, மே மாத ஒப்பந்தத்தில், ஒரு பேரல், மைனஸ் 0.29 டாலராக உயர்ந்தது.ஜூன் மாத ஒப்பந்தத்துக்கான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, நியூயார்க் சந்தையில், 11.61 சதவீதம் குறைந்து, ஒரு பேரல் 22.55 டாலராக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|