பதிவு செய்த நாள்
28 ஏப்2020
22:49
புதுடில்லி : உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, கிரிசில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி, 1.8 சதவீதமாக இருக்கும், என, அறிவித்து உள்ளது.
மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க, நாடு முடக்கப்பட்டதால், 10 லட்சம் கோடி ரூபாய் அல்லது நபர் ஒன்றுக்கு, 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. துவக்கத்தில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 6 சதவீதமாக இருக்கும் என, இந்நிறுவனம் கணித்திருந்தது.அதன் பின்னர், கடந்த மார்ச் இறுதியில், 3.5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. தற்போது அதையும் பாதியாக்கி, 1.8 சதவீதமாக அறிவித்து உள்ளது. அரசின் தடை அறிவிப்பு, பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும்; அது, அரசின் நிவாரண நடவடிக்கைகளையும் மீறி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிரந்தரமான இழப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கிரிசில் எச்சரித்துள்ளது.
பணவீக்கத்தை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் இறுதியில், அரசின் சவுகரியமான இலக்கை பெரிதாக மீறாமல், 4.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, தெரிவித்துள்ளது. அத்துடன், ரூபாயின் மதிப்பு, டாலருக்கு எதிராக, 73 ரூபாயாக இருக்கும் என்றும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், கடந்த நிதியாண்டை விட, 0.2 முதல், 1 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வழங்கப் பட்டிருக்கும் நிதி சலுகைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.நாட்டில், 38 சதவீதம் பேர், தகுதி வாய்ந்த வேலை ஒப்பந்தம் இல்லாதவர்கள் என்றும், தடை மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில், இவர்கள் நிரந்தர வேலை இழப்பை சந்திக்கக் கூடும் என்றும், கிரிசில் எச்சரித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|