பதிவு செய்த நாள்
08 மே2020
23:32
புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த, 'விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ்' நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின், 2.32 சதவீத பங்குகளை, 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.
ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், தொடர்ந்து பல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. 'பேஸ்புக்' நிறுவனம், ஜியோ பிளாட்பார்மின், 9.99 சதவீத பங்குகளை, 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய்க்கு அண்மையில் வாங்கியது. பேஸ்புக்கை அடுத்து, உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக், 1.15 சதவீத பங்குகளை, 5,665.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த வரிசையில் தற்போது, விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் நிறுவனம், 2.32 சதவீத பங்கு களை, 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்குள், ஜியோ பிளார்ட்பார்ம் நிறுவனம், 60 ஆயிரத்து, 596 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது.
ஜியோ பிளார்ட்பார்ம் நிறுவனம், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடனை விரைவில் அடைக்கும் திட்டத்தின் கீழ், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்திலும் முதலீடுகள் வரவேற்கப்பட்டு வருகிறது.
விஸ்டா நிறுவனம், உலகளவில் மிகப் பெரிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமாகும். மென்பொருள், தொழில்நுட்பம், தரவு ஆகிய சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், விஸ்டா முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
விஸ்டா முதலீடு குறித்து, முகேஷ் அம்பானி கூறியதாவது:உலக தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான, விஸ்டாவை வரவேற்பதில், நான் மகிழ்ச்சிஅடைகிறேன். எங்களின் மற்ற பங்குதாரர்களைப் போலவே, விஸ்டாவும், இந்திய டிஜிட்டல் அமைப்பை வளர்த்து, அதை அனைத்து இந்தியர்களின் நலனுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியில், எங்களுடன் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|