பதிவு செய்த நாள்
09 ஜூன்2020
09:27

‘கொரோனா’ பரவியதையடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வெளிமாநில தொழிலாளர்கள் பலர், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு ரயில்கள், பஸ்களுக்காக காத்திருக்காமல் நடந்தும், சைக்கிள்களிலும், சரக்கு வாகனங்களிலும், சொந்த ஊருக்கு பயணித்தனர்.நாடு சுதந்திரம் பெற்று, 73 ஆண்டுகளுக்கு பின்னும், 130 கோடி மக்களில், சுமார், 10 சதவீதம் பேர், வாழ்வாதாரம் தேடி, வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். கட்டுமான பணிகளில், 4 கோடி பேர், வீட்டு வேலைகளில் 2 கோடி பேர், டெக்ஸ்டைல் ஆலை மற்றும் செங்கல் சூளைகளில் தலா ஒரு கோடி பேர், போக்குவரத்து, சுரங்கம் மற்றும் குவாரிகள், விவசாய தொழிலாளர்கள் என்று, புலம் பெயரும் தொழிலாளர்களின் உத்தேச விபர பட்டியல் சொல்கிறது. இவர்கள் குறித்த துல்லியமான புள்ளி விபரங்கள், மத்திய, மாநில அரசுகளிடம் இல்லாததால் எல்லாம் உத்தேச கணக்குகள் தான்.
தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?
எப்போதும், கவலைகளை கனவுகளாகவும், பிரச்னைகளை வரங்களாகவும் மாற்றி, தொழிலில் சாதனை படைக்கும் கொங்கு மண்டலம் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன?.தமிழகத்தில் தொழில் வளம்மிக்க, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நகரங்களில், கட்டுமானம், டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் மெசினரி, பவுண்டரிஸ், ஓட்டல்கள், எம்.எஸ்.எம்.இ., தொழில் அமைப்புகளில், வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் பணிபுரிந்தனர். இப்போது சொந்த ஊர் சென்றிருக்கும் தொழிலாளர்களுக்கு, மறுபடி வேலைக்கு திரும்பும் எண்ணம் ஏற்பட்டால் கூட திரும்ப வர, நீண்ட நாட்கள் ஆகும்.இதனால், தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இரு மாதங்களுக்கும் மேலாக, தமிழக தொழிற்கூடங்களில் உற்பத்தி நடக்கவில்லை. தயாரித்த பொருட்களை விற்க முடியவில்லை. நிறுவனங்கள் வருவாய் இல்லாமல் திண்டாடுகின்றன. அரசு அளித்திருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, தொழிற்கூடங்கள் மீண்டும் எழுந்து நிற்க நினைக்கும் நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றது, வரும் நாட்களில், பல துறைகளில், பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
உற்பத்தியை பாதிக்கும்
ஊரடங்குக்கு பின், தொழிற்கூடங்களுக்கு உற்பத்தி வாய்ப்புகள் பழையபடி கிடைத்தாலும், உரிய நேரத்தில், நேர்த்தியான தரத்தில் உற்பத்தி செய்து பொருட்களை அனுப்ப, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் அவசியம். புதிதாக ஆட்கள் தேர்வு செய்தாலும், அவர்களை உடனடியாக பணியில் ஈடுபடுத்த முடியாது. தொழிற்கூடங்களின் உற்பத்தி இழப்பு, வெளிமாநில தொழிலாளர்களின் வருமானம் இழப்பு, இவை இரண்டும் சேர்ந்து, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும்.சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், பணியாளர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து இயங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, தொழில் துறையினரும், அரசும் இணைந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.
வளமாக்கிய மில் வேலை
ஒரு காலத்தில், கோவையில் பிரமாண்டமாக இயங்கிய நுால், ஜவுளி உற்பத்தி ஆலைகளிலும், இயந்திர உதிரிபாக ஆலைகளிலும், மண்ணின் மைந்தர்களுக்கே பணி வாய்ப்பு கிடைத்தது. ஒருவருக்கு மில் வேலை கிடைத்துவிட்டால், 30, 40 வருடங்கள் அங்கேயே வேலை பார்த்து ஓய்வு பெறுவார். காலச்சுழலில், தொழில் போக்குகள் மாறிவிட்டன. புதிதாக தோன்றிய தொழில் அமைப்புகள், வெளிமாநில தொழிலாளர்களையே நம்பின.இப்போது காலச்சக்கரம் மீண்டும் சுழல ஆரம்பித்திருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி வர நாட்கள் ஆகும் நிலையில், மண்ணின் மைந்தர்களுக்கு உரிய பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து சிந்திக்கலாம். தொழிலாளர் பற்றாக்குறை உள்ள தொழில் அமைப்புகள், தேவையான பணியாளர்களை, சொந்த மாவட்டங்கள், அண்டை மாவட்டங்கள், சொந்த மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யலாம். அதனால், உள்ளூரில் வேலையில்லா திண்டாட்டம் குறையும். இதிலுள்ள சவால், நம் ஊரில் இந்த வேலையை செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கும் உள்ளூர் மைந்தர்களை முன்வர வைப்பதுதான்.
யார் தொடங்குவது?
சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உட்பட, தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தங்கள் தொழில், தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைகளை, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில், எந்தந்த தொழிற்சாலைகளுக்கு பணியாளர் பற்றாக்குறை என்ற பட்டியல் சேகரிக்க வேண்டும்.தேவையான தொழிலாளர்களை, வேலைவாய்ப்பு பதிவகம் வாயிலாக, மாவட்ட நிர்வாகங்களோ அல்லது தொழில் அமைப்புகளோ அல்லது குறிப்பிட்ட தொழில்களின் அமைப்புகளின் வாயிலாகவோ சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, தகுதியான, உள்ளூர் இளைஞர்களை தேர்ந்தெடுக்கலாம். பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங், பிசினஸ் ஸ்கூல் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரி நிர்வாகங்கள் கூட இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, திறன்மிகு இளைஞர்களை தேர்ந்தெடுத்து, தங்கள் மாவட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு சிறந்த மனித வளத்தை அளிக்கும் பணியில் இறங்கலாம்.
அரசு உதவ வேண்டும்
இப்படி தேர்வாகும் இளைஞர்களுக்கு, குறிப்பிட்ட தொழில் அமைப்புகளின் வாயிலாக, தொழில் தன்மைக்கு ஏற்ப சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி தர வேண்டும். பயிற்சிக்கான செலவுகளை, தொழில் அமைப்புகளின் கிளஸ்டர்களோ, மாவட்ட நிர்வாகங்களோ, தமிழக அரசோ ஏற்க வேண்டும். இது சொல்வதற்கு எளிதாக தோன்றும்; நடைமுறைப்படுத்துவது சற்று சவாலான காரியம் தான். ஆனால் எல்லா தரப்பும் இணைந்து இதை சாதித்துவிட்டால், ஊரடங்கால் வேலை இழந்தவர்களுக்கும், கல்லுாரி படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கும், உள்ளூரிலேயே வேலை கிடைத்து, அவர்கள் வாழ்வில், புது நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கும்.
ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குபவர்கள்\
பீகார், ஒடிசா, ஜார்கண்ட், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், கட்டுமான தொழில்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், மெட்ரோ ரயில் பணிகளில் பணிபுரிகின்றனர். இவர்களில், கோவையில், சுமார் 2 லட்சம், திருப்பூரில், சுமார் 3 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இயங்கும் தொழிற்சாலைகளை கணக்கிட்டால், வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: Karthi@gkmtax.com
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|