பதிவு செய்த நாள்
12 ஜூன்2020
22:05
புதுடில்லி:அனில் அம்பானியிடமிருந்து, 1,200 கோடி ரூபாயை வசூலிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி இருக்கிறது,
பாரத ஸ்டேட் வங்கி.எஸ்.பி.ஐ., வங்கி, அனில் அம்பானியிடமிருந்து, 1,200 கோடி ரூபாயை திரும்ப பெறுவதற்கு, திவால் சட்டத்தின், தனிப்பட்ட உத்தரவாத பிரிவு, 97 – 3ன் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி உள்ளது.
உத்தரவாதம்
‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் வாங்கிய கடன்களுக்கு, அனில் அம்பானி, தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்துள்ளார். தற்போது, திவால் நிலை நடவடிக்கைகளுக்கு அவர் உள்ளாகி இருக்கும் நிலையில், எஸ்.பி.ஐ., இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து பதில் தருவதற்கு, கால அவகாசம் தர வேண்டும் என, அனில் அம்பானியின் வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, அனில் அம்பானி தரப்புக்கு, ஒரு வார கால அவகாசத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் வழங்கி உள்ளது.அனில் அம்பானி தரப்பில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த கடன்கள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகியவை வாங்கின; அனில் அம்பானி, தன் பெயரில் வாங்கிய தனிநபர் கடன் அல்ல.
அங்கீகாரம்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய தீர்மானத் திட்டங்கள், கடன் வழங்கிய நிறுவனங்களால், கடந்த மார்ச் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானத் திட்டங்கள், மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இவ்விவகாரங்கள் குறித்து, அனில் அம்பானி தகுந்த பதில்களை தாக்கல் செய்வார்.இவ்வாறு அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனுக்கு, தனிப்பட்ட உத்தரவாதத்தை அனில் அம்பானி வழங்கி இருப்பதால், அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை வசூலிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வங்கி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|