பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
22:33
கோல்கட்டா:இந்தியா – சீனா இடையே, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்திய இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி, ‘ஆர்டர்’களை நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக, கோல்கட்டாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி பொருட்களுக்கான புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து, கோல்கட்டா சுங்க வரி அலுவலக ஏஜென்டுகள் சங்கத் தலைவர் சுஜித் சக்ரபர்த்தி கூறியதாவது:சீனாவிலிருந்து பொம்மைகள் முதல், விளக்குகள், தொழிற்சாலை பொருட்கள் வரை இறக்குமதி ஆகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏற்கனவே, 30 – 40 சதவீதம் அளவுக்கு இறக்குமதி குறைந்துவிட்டது.இப்போது, கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னைக்கு பின், இறக்குமதியாளர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களும் தங்கள் கவலையை தெரிவித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவுக்கான ஏற்றுமதி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ரவி சேகல் கூறியதாவது:பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, தற்காலிக பாதிப்பை சந்தித்து உள்ளது. பொதுவாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், வணிகத்துடன் அரசியலை இணைத்துப் பார்க்க மாட்டார்கள்.இப்போதைய பிரச்னைகளால், ஏற்றுமதியாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கலாம். ஆனால், பணம் குறித்த பிரச்னைகள் இல்லாதபட்சத்தில், ஏற்றுமதிகள் இயல்பாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவதில், 20 சதவீதம், கோல்கட்டா துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. நாடு முடக்கப்பட்ட காரணத்தால், தற்போது, 4,000 கன்டெய்னர்கள் அங்கு தேங்கியுள்ளன.நாடு முடக்கப்பட்ட சமயத்தில், ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருந்தது. தற்போது, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், ‘ஸ்மார்ட்போன்’ உள்ளிட்ட முக்கியமான, 20 பொருட்களில், 43 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதிக்கு கட்டுப்பாடு
டயர் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை, வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.இதனால் உள்நாட்டு தயாரிப்பு அதிகரிப்பதுடன், ஏற்றுமதியும் அதிகரித்து, வேலைவாய்ப்பு களும் பெருகும் என இவ்வமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கான, ரேடியல் டயர்கள் மற்றும் பயணியர் கார்களுக்கான டயர்களைப் பொறுத்தவரை, 40 சதவீதத்துக்கும் அதிகமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
டிராக்டர்களுக்கான டயர் இறக்குமதியில், நான்கில் மூன்று பங்கு டயர்கள், சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. இந்நிலையில், டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது, மத்திய அரசு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|