பதிவு செய்த நாள்
20 ஜூன்2020
21:26
புதுடில்லி:மத்திய அரசு, சீன இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தரம் குறைந்த சீன பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, 370 பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பொருட்களுக்கான தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை அதிகரிக்கும்பட்சத்தில், இவை, சீனாவிலிருந்து இறக்குமதி ஆவதை எளிதாக தவிர்த்துவிட முடியும் என, ஆலோசனைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடும் விதிமுறைகள்
இந்த, 370 பொருட்களில் உருக்கு, நுகர்வோர் மின்னணு, கனரக இயந்திரங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், உலோக பொருட்கள், மரச் சாமான்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், உலோகப் பொருட்கள், ஜவுளி ஆகியவை அடங்கும்.இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இறக்குமதியில், கிட்டத்தட்ட, 14 சதவீதம், சீனாவிலிருந்து செய்யப்படுவதாகும்.
குறிப்பாக செல்போன்கள், தொலைதொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்து பொருட்கள் ஆகியவை அதிகளவில், சீனாவிலிருந்து தான் இறக்குமதி ஆகின்றன.இதற்கிடையே, சீனா அல்லாத பிற நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க ஏதுவான முயற்சிகளை மேற்கொள்வது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கி விட்டது.
உதாரணமாக சொல்வதென்றால், டயர்கள் இறக்குமதியில் கட்டுப்பாட்டை அதிகரித்திருப்பதை சொல்லலாம். இதன் மூலம், சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் டயர்கள் கட்டுப்படுத்தப்படும்.அடுத்து, சீனாவிலிருந்து செய்யப்படும் அன்னிய முதலீடு. அன்னிய முதலீட்டாளர்கள் போர்வையில், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியை சீனா மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில், சீன முதலீடுகளுக்கு விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது.
மேலும், நம் நாட்டின் பென்ஷன் பண்டுகளில், சீனாவிலிருந்து செய்யப்படும் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தையும், மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. தற்சமயம் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய முதலீட்டுக்கு, முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
ஆலோசனை
அடுத்து, அதிகமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, சுங்க வரியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, இந்திய வர்த்தக அமைச்சகமும், சில துறைகளை அடையாளம் கண்டு, அவற்றில் இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியை தடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, உருக்கு, அலுமினியம், செம்பு, வேளாண் ரசாயனங்கள், மின்னணுவியல், தொழில்துறை இயந்திரங்கள், தோல் மற்றும் காலணிகள், வாகன பாகங்கள், ஜவுளி என, பல துறைகளை வர்த்தக அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.மேலும், மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு, சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்கவும் பல முயற்சிகள் ஏற்கனவே துவக்கப்பட்டுவிட்டன.
கடந்த மார்ச் மாதத்தில், மருத்துவ சாதனங்கள், மருந்துகள் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த, 13,760 கோடி ரூபாய் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.அரசிடமிருந்து, அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லரை வர்த்தகம்
சீனாவிலிருந்து செய்யப்படும் மொத்த இறக்குமதியில், சில்லரை வர்த்தகர்கள், 1.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை பொம்மைகள், வீட்டு பொருட்கள், மொபைல்கள், மின்சார, மின்னணு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவையே.
வர்த்தக பற்றாக்குறை
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி வரை, இந்தியா, 4.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது. அதே நேரத்தில் அண்டை நாட்டிற்கான ஏற்றுமதி, 1.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 3.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|