பதிவு செய்த நாள்
18 ஜூலை2020
22:22
புதுடில்லி:நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48 சதவீதம் சரிந்துள்ளதாக, ஆராய்ச்சி நிறுவனமான, ’கேனலைஸ்’, அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48 சதவீதம் சரிவைக் கண்டு, 1.73 கோடி போன்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.இந்த சரிவுக்கு, கொரோனா தொற்று பரவலும்; அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதும் முக்கிய காரணம் ஆகும்.ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ‘ஆன்லைன்’ மற்றும் ஸ்டோர்கள் மூலமான விற்பனையும் பல இடங்களில் தடைசெய்யப்பட்டுவிட்டன.ஜூன் காலாண்டின் ஆரம்ப கட்டங்களில், உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், சயோமி, ஒப்போ போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்தன.நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையை மீட்டெடுப்பது என்பது சவாலான காரியமாக இந்த காலாண்டில் இருந்தது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தைகள் திறந்ததும் விற்பனை அதிகரித்தது.ஆனால், உற்பத்தி குறித்த புதிய விதிமுறைகள், பணியாளர் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உற்பத்தி கணிசமாக சரிந்தது.இந்த காலகட்டத்தில், முன்னணி விற்பனையாளர்களில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த பாதிப்புக்கு ஆளானது. கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே சரிவைக் கண்டு, 2.50 லட்சம் போன்கள் விற்பனை ஆகின.
சயோமி நிறுவனம், 30.9 சதவீத சந்தை பங்களிப்புடன், 53 லட்சம் போன்களை விற்பனை செய்து, முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில், ஒப்போவும்; மூன்றாவது இடத்தில், சாம்சங் நிறுவனமும் உள்ளன.கடந்த ஆண்டில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட போன்களில், 96 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை அல்லது, அசெம்பிள் செய்யப்பட்டவை ஆகும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|