பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
22:20
புதுடில்லி:நாட்டின் தங்க இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 94 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், தங்க இறக்குமதி, 94 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இந்த காலாண்டில், 688 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது, கிட்டத்தட்ட, 5,160 கோடி ரூபாய் ஆகும். கொரோனா பரவலால் தங்கத்தின் தேவை குறைந்தது இந்த சரிவுக்கு காரணமாகும்.
இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், தங்க இறக்குமதி, 86 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தங்கத்தின் இறக்குமதி மட்டுமன்றி; வெள்ளி இறக்குமதியும் மதிப்பீட்டு காலத்தில், 45 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இக்காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு, 4,300 கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி குறைந்தது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவி செய்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் வர்த்தக பற்றாக்குறை, 68 ஆயிரத்து,856 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 3.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
நாட்டின் தங்க இறக்குமதி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனையடுத்து, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக உபரி, 60 கோடி டாலராக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், வர்த்தக பற்றாக்குறை, 460 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.
தங்கத்தை மிகப் பெரும் அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியா, 800 – 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. நாட்டில் ஆபரணங்கள் தேவைக்காகவே அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|