பதிவு செய்த நாள்
01 நவ2020
22:01
நிதி நுட்ப நிறுவனங்கள் பல செயலிகள் மூலம், ‘டிஜிட்டல்’ கடன் வசதியை வழங்கி வருகின்றன. இந்தியர்கள் மத்தியில் இத்தகைய டிஜிட்டல் கடன் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், இதை வாய்ப்பாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் போலி கடன் செயலிகளும் அதிகரித்துள்ளன.
கடந்த சில மாதங்களில், ஐந்து லட்சம் பேருக்கு மேல், மோசடி கடன் செயலிகளை நம்பி ஏமாந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. மோசடி கடன் செயலிகளை கண்டறிய உதவும் வழிகள் வருமாறு:
கடன் வரலாறு:
டிஜிட்டல் கடன் செயலிகள் கடன் பெறுவதை எளிதாக்கி இருக்கின்றன. ஆனால், அவை முறையான பரிசீலனைக்கு பிறகே கடன் வழங்குகின்றன. மோசடி செயலிகள், கடன் வரலாற்றை கூட கேட்பதில்லை. கடன் தேவையுடன் வருபவர்களின் அவசரத்தை பயன்படுத்திக் கொள்வதே இவற்றின் நோக்கம். உரிய தகவல்களை கேட்காத செயலிகள் போலியாக இருக்கலாம்.
விண்ணப்ப நெருக்கடி:
மோசடி செயலிகள், ஏதேனும் ஒரு விதத்தில், கடன் கோரிக்கை வைப்பவர்களை உடனே விண்ணப்பிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றன. குறிப்பிட்ட கெடுவுக்குள் விண்ணப்ப செயல்முறையை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்துவது, மோசடி வலைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
கட்டண தகவல்கள்:
டிஜிட்டல் கடன் செயலிகள், கடன் தொடர்பான செயல்முறை மற்றும் கட்டண விபரங்களை தெளிவாக குறிப்பிடுகின்றன. இத்தகைய விபரங்கள் தெளிவாக இல்லை எனில், சந்தேகம் கொள்ள வேண்டும். கடன் பெறுவதற்கு உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் என, இவை மோசடி வலை விரிக்கலாம்.
உரிய முகவரி:
டிஜிட்டல் செயலிகளுக்கு என அதிகாரப்பூர்வ இணையதளம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அந்த இணையதளத்தின் முகவரியில் பாதுகாப்பை குறிக்கும், எச்.டி.டி.பி.எஸ்., இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செயலியின் பின் உள்ள நிறுவனத்திற்கு அலுவலகம் இருக்க வேண்டும்; அதற்கான முகவரி தளத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வு தேவை:
இணையம் மூலம் மட்டுமே செயல்படும் நிறுவனம் என்றாலும் கூட, ‘இ – மெயில்’ போன்ற அதன் தொடர்பு முகவரிகளை கவனிக்க வேண்டும். எந்த செயலியையும் பயன்படுத்தும் முன், அவை தொடர்பான, ‘ஆன்லைன்’ விமர்சனங்களை படித்துப் பார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி உரிமம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|