பதிவு செய்த நாள்
14 நவ2020
07:31
புதுடில்லி:ஏற்றுமதியாளர்களுக்கான, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்திற்கு மாற்றாக, புதிய சலுகை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.வெளிநாடுகளில் அதிக தேவைப்பாடு உள்ள பொருட்களை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனங்களை ஊக்குவித்து, அவற்றின் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் நோக்கில், எம்.இ.ஐ.எஸ்., எனப்படும், இந்திய வர்த்தக ஏற்றுமதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி குறைந்ததுஇத்திட்டத்தில், வரையறுக்கப்பட்ட பொருட்களை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிக்காக இறக்குமதி செய்யும் சாதனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதற்காக இத்திட்டத்திற்கு, 2019 – 20ம் நிதியாண்டில், 39 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டில், ஏப்., – டிச., வரையிலான காலத்திற்கு, 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, ஏற்றுமதி குறைந்தது. இதனால், பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்திற்கான ஒதுக்கீட்டை, 15 ஆயிரத்து, 555 கோடி ரூபாயாக, மத்திய நிதியமைச்சகம் உயர்த்தியது. எனினும், கடந்த ஆண்டுகளில், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது. ஒப்புதல்இத்திட்டம், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க துணை புரியவில்லை என்பதுடன், மத்திய அரசின் மானியச் செலவினமும் இதனால் அதிகரித்து வருவது, கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்திற்கு மாற்றாக, புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என, மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, அரசு கொள்கை திட்டங்களை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:எம்.இ.ஐ.எஸ்., திட்டத்திற்கு பதிலாக, ஏற்றுமதியாளர்களுக்கு, புதிய வரிச் சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.புதிய திட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு அடிப்படையிலான, மூலப்பொருட்களுக்கு செலுத்தும், உள்ளீட்டு வரியை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெறலாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார். குறைக்க வேண்டும்ஊரடங்கு காரணமாக, சுங்கத் துறை வருவாய் வெகுவாக குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டிற்கான, எம்.இ.ஐ.எஸ்., திட்டச் சலுகை வரம்பை, 16 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்குமாறு, வருவாய் துறை, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஏப்ரலில், எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் ஏற்றுமதி, 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், செப்டம்பரில் ஏற்றுமதி, 6 சதவீதம் அதிகரித்து, மீண்டும் அக்டோபரில், 5.4 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|