பதிவு செய்த நாள்
17 நவ2020
12:27
பல நாடுகளிலும், கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி இருக்கிறது. ஆனால், தீபங்களின் ஒளி வெளிச்சத்தினாலும், தொழில்துறை தரவுகளாலும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் வேகமாக மீண்டெழுவது, இந்தியா மீண்டும் மிளிர தொடங்கி உள்ளதை உணர்த்துகிறது.
ஜி.எஸ்.டி. அமோகம்
சமீபத்தில், வெளியான மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் குறிப்பில், ‘2020 அக்டோபர் 31ம் தேதி வரை, ‘ஜி.எஸ்.டி.ஆர் -3பி’ தாக்கல் செய்துள்ள, சுமார் 80 லட்சம் வர்த்தகர்களிடமிருந்து மொத்தம், ரூ.1.05 லட்சம் கோடி வசூலாகி உள்ள தகவல் வந்துள்ளது. கடந்த 7 மாதங்களில், முதல் முறையாக, ஜி.எஸ்.டி. வசூல், ஒரு லட்சம் கோடியை கடந்திருக்கிறது. இதுவே, ஜூலை மாதத்தில், 87 ஆயிரம் கோடி, ஆகஸ்ட் மாதத்தில், 86 ஆயிரம் கோடி, செப்டம்பர் மாதத்தில், 95 ஆயிரம் கோடி அளவிலும் இருந்தது.
‘இ-வே’ பில் உச்சம்
அதேபோல, நாட்டில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் முக்கிய ஆவணமான ‘இ–வே’ பில் உருவாக்கியதிலும், கடந்த மாதம் சாதனை எட்டியது. ஜி.எஸ்.டி. அமலான பின், ‘இ –வே’ பில் நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மிக அதிகபட்சமாக, கடந்த அக்டோபர் மாதத்தில்தான், மொத்தம், 6 கோடியே 41 லட்சம் ‘இ-வே’ பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உற்பத்தியிலும், மக்கள் நுகர்விலும், நாடு முழுவதும் புதிய வேகம் பிறந்துள்ளதை, இது உணர்த்துகிறது.
பொருளாதார மீட்சி
இவை ஒருபுறமிருக்க, நிதி அமைச்சரும், “ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 35.37 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருக்கிறது. இது, 13 சதவீத வளர்ச்சி ஆகும். அன்னிய செலாவணி கையிருப்பு, 560 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வங்கிக் கடன்கள், 5.1 சதவீதம் அதிகரித்துள்ளன. நடப்பு நிதியாண்டின், 3வது காலாண்டில் பொருளாதார மீட்சி வலுவாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது,’’ என்று சொல்லி இருக்கிறார்.
உற்பத்தி உயர்வு
இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தின் மின் நுகர்வு, 12 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தியின் அலகு நிர்ணயிக்கும், ‘பர்ச்சேஸ் மேனேஜர் இன்டக்ஸ்’ 59 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2010ம் ஆண்டுக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது. இவையெல்லாம் உற்பத்தி துறை, மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்புவதையே காண்பிக்கிறது.
அள்ளுது ஆட்டோமொபைல்
கொரோனா ஒழிப்பு பணியில், முதல் நிலை கள வீரர்களாக, மக்கள் உயிரை, மருத்துவர்கள் காப்பது போல, கடன், உற்பத்தி இழப்பு, தொழிலாளர் பற்றாக்குறை இவற்றுக்கு மத்தியிலும், மனதை திடப்படுத்திக்கொண்டு, சாம்பலில் இருந்து ‘பீனிக்ஸ்’ பறவை உயிர்த்தெழுவது போல, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உத்வேகத்துடன் பொருளாதாரத்தின் உயிர் நாடியை காப்பாற்றி இருக்கின்றனர். இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். நாட்டின் ஏற்றுமதி, 5.4 சதவீதம் குறைந்துள்ளது. இது, மற்ற நாடுகளில், மக்களின் நுகர்வு இன்னும் அதிகரிக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதே நேரத்தில், நமது உள்நாட்டு நுகர்வு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது நம்பிக்கையளிக்கிறது. மாருதி, ஹூண்டாய் போன்ற ஆட்டோமொபைல் துறைகளில் கூட, விற்பனை அதிகரித்துள்ளன. ஆனால், அதே வளர்ச்சியும், இயல்பு நிலையையும், எல்லா துறைகளும் எட்டவில்லை. பொழுதுபோக்கு, திரைத்துறை, சுற்றுலா, ஓட்டல்கள், ரிசார்ட்கள் போன்றவை இன்னமும் சுணங்கி கிடக்கின்றன.
எல்லா தரப்பும் வளர்ச்சி
சரக்கு போக்குவரத்து, ஜி.எஸ்.டி., வசூல் ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு, உற்பத்தி துறை வளர்ச்சியை பார்த்தோம். ஆனால், அது தேசத்தின் முழுமையான பொருளாதார வளர்ச்சியாக இல்லை. காரணம், நடுத்தர வர்க்கம், அதற்கும் கீழே உள்ள மக்களில் பெரும்பாலானோர், கொரோனா காரணமாக வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்பு உருவாகவில்லை. பலருக்கு மிகக்குறைவான போனஸ் கிடைத்துள்ளது; பலருக்கு போனஸ் கிடைக்கவில்லை.இந்த நிலை மாறுவதற்கு, தற்போது நன்றாக இயங்கத்தொடங்கியுள்ள தொழில் துறைகள், இயல்பு நிலைக்கு திரும்பாத மற்ற தொழில்கள் அல்லது தங்களை சார்ந்த தொழில்களுக்கு உதவி செய்து, கைதுாக்கிவிட வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பும் வளர்ச்சி பெறும். இப்போது மைனசில் இருக்கும் நாட்டின் ஜி.டி.பி., கூட, அதனால் பிளஸ் ஆகி, உயர்வை நோக்கிச் செல்லும்.
ஜி.டி.பி., உயரும்
2020ம் ஆண்டின் முதல் காலாண்டில், மைனஸ், 23.9 சதவீதம் ஆக இருந்த நாட்டின் ஜி.டி.பி., அடுத்த காலாண்டில், மைனஸ் 5 சதவீதம் ஆனது. 3வது காலாண்டின் ஜி.டி.பி., இனிமேல்தான் தெரியவரும். ஆனால், 2021 ஜனவரி முதல் மார்ச் வரையான, நான்காவது காலாண்டில், ஜி.டி.பி. நிச்சயம் உயரும். கடினமான சூழலையும் வெற்றி கொண்டு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு, ‘எதையும் எதிர்கொள்ளும்’ உத்வேகமுள்ள நமது தொழிலதிபர்கள் தான் காரணம் என்றால் மிகையில்லை. கொரோனா பரவல் தொடங்கிய, முதல் மூன்று மாதங்கள் வீட்டில் முடங்கிக் கிடந்த தொழிலதிபர்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு புது உத்வேகம் பெற்று, பொருளாதாரம் மீண்டெழ கடினமாக உழைத்தனர். நாம் கண்டு கொண்டிருக்கும் பொருளாதார மீட்சி தற்காலிகமானதாக இருக்காமல், நிரந்தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொள்வோம்.
வேளாண்மை, நெசவு, எம்.எஸ்.எம்.இ., துறைகள் தான் நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை. கட்டமைப்புத்துறை அதிக வேலை வாய்ப்பைக் கொடுக்கக்கூடிய ஒன்று. இந்த துறையை சார்ந்தவர்கள் சோர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும், பாரத பொருளாதாரம் எப்போதும் ஒளிரும்.
ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே, உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com
– முற்றும்
நெகிழ்ச்சியான வாய்ப்புதொழிலதிபர்கள், வணிகர்கள், சிறு, குறுந்தொழில்துறையினர், இல்லத்தரசிகள் என்று, அனைத்து தரப்பினர் வாசிக்கும் ‘தினமலர்’ நாளிதழில், தொடர்ந்து, 50 வாரங்கள் தொடர் எழுதிய முதல் கட்டுரையாளர் என்பதை அறிந்ததும், மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த தொடரை இக்கட்டுரையுடன், பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.இந்தத் தொடரில், வரிகள், வணிக நடைமுறைகள், வங்கிக்கடன் வசதிகள், எம்.எஸ்.எம்.இ., தொழில் சலுகைகள், நாட்டின் பொருளாதார நிலவரம், முதலீடு போன்றவை குறித்து, எனது அனுபவங்களை பகிர்ந்துள்ளேன். தொடர் வாசித்து, என்னை தொடர்பு கொண்டு நிறைய கருத்துக்கள், விமர்சனங்கள் அளித்த வணிக வாசகர்களுக்கு நன்றி! மீண்டும் புதிய தகவல்களுடன் விரைவில் சந்திக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை எனக்கு இமெயில் செய்யுங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|