பதிவு செய்த நாள்
13 டிச2020
21:55
மருத்துவக் காப்பீடு பாலிசி பிரீமியம் தொகையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பல்வேறு அம்சங்களை அறிந்திருப்பது அவசியம்.
காப்பீடு துறை முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. மருத்துவக் காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையும் அதிகரித்துள்ளது. அண்மை மாதங்களில், பல பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியம் தொகை கணிசமாக அதிகரித்து இருப்பதை உணர்ந்துள்ளனர். மருத்துவக் காப்பீடு பாலிசிகளை தரப்படுத்துவதற்கான நெறிமுறைகள் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பிரீமியம் தொகை உயரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பிரீமியம் தொகை, 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆணையம் விளக்கம்
இந்நிலையில், பிரீமியம் தொகை உயர்வு தொடர்பான செய்திகளுக்கு, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ‘இர்டாய்’ விளக்கம் அளித்துள்ளது. தர நிர்ணய நெறிமுறைகளால், 5 சதவீதத்திற்கு மேல் பிரீமியம் தொகை உயர வாய்ப்பில்லை என, ஆணையம் தெரிவித்துள்ளது. நெறிமுறைகளுக்கு ஏற்ப பாலிசிகளை மாற்றி அமைக்க, 5 சதவீதம் வரை மட்டுமே பிரீமியம் தொகையை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், மருத்துவக் காப்பீடு பாலிசிகளை புதுப்பித்தவர்களில், 10 சதவீதத்தினர், 30 சதவீதம் அளவுக்கு பிரீமியம் தொகை உயர்ந்திருப்பதை உணர்ந்துள்ளதாக, காப்பீடு இணையதளம் பாலிசிபசார் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வுக்கு காரணமாக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.பிரீமியம் தொகை வயதுக்கேற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக, 30 முதல், 35 வயது வரை குறிப்பிட்ட பிரிமியம் இருக்கலாம். ஆனால், 35 வயதை கடந்தவுடன், அடுத்தக் கட்ட வயதிற்கு சென்று விடுவதால், அதற்கேற்ப பிரீமியம் தொகை அதிகரிக்கலாம். எனவே, வயது காரணமாகவும் பிரீமியம் தொகை உயரலாம் என, காப்பீடு துறை வல்லுனர்கள் விளக்கம் தருகின்றனர்.
‘கிளைம்’ விகிதம்
மேலும், காப்பீடு நிறுவனங்கள், ‘கிளைம்’ விகிதத்திற்கு ஏற்பவும் பிரீமியம் தொகையை உயர்த்துகின்றன. நிகர பிரீமியம் தொகை மற்றும் கிளைமாக வழங்கப்பட்ட தொகைக்கான விகிதம் அதிகமாக இருக்கும் போது, நிலைமையை சமாளிக்க பிரீமியம் தொகை உயர்த்தப்படலாம். தற்போது, கொரோனா சூழலில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து இருப்பதும், பிரீமியம் தொகை உயர ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதே போல, பழைய பாலிசிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய பாலிசிகள் அறிமுகம் செய்யப்படுவதும் ஒரு காரணமாக அமையலாம். புதிய பாலிசிகள், புதிய அம்சங்களுடன் அதிக பிரீமியம் கொண்டதாக அமையலாம்.பிரீமியம் தொகை உயர்வுக்கான பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, வயதானவர்கள் தங்கள் மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகை உயர்வின் சுமையை அதிகம் உணரலாம்.
இந்த பின்னணியில், பிரிமியம் தொகை அதிகமாக இருப்பதாக உணர்பவர்கள், குறைந்த தொகை பாலிசிக்கு மாறும் வாய்ப்பை பரிசீலிக்கலாம்.ஆனால், இது தொடர்பான வரம்புகளை உணர வேண்டும். போதுமான காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொண்டே, இந்த மாற்றத்தை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். பாலிசிதாரர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீடு பெறுவதன் அவசியத்தை பலரும் உணர்வது முக்கியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|