பதிவு செய்த நாள்
17 டிச2020
21:21
புதுடில்லி:வேதாந்தா குழுமம், கூட்டு நிறுவனத்தின் துணையுடன், நலிந்த பொதுத் துறை நிறுவனங்களை, 75ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நடப்பு நிதியாண்டில், 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஒப்பந்தம்
இதில், பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரஸர், ஸ்கூட்டர்ஸ் இந்தியா, பவன் ஹன்ஸ் போன்ற நலிவுற்ற நிறுவனங்களின், 100 சதவீத பங்கு விற்பனையும் அடங்கும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், வளர்ச்சி வாய்ப்புள்ள, நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களை கையகப்படுத்த, அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த, சென்ட்ரிகஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளது.சாதாரண உலோக வியாபாரியாக இருந்த, அனில் அகர்வால், நலிந்த நிறுவனங்களை குறைந்த விலைக்கு வாங்கி, தன் நிர்வாகத் திறமையால், லாபகரமான நிறுவனமாக உயர்த்துவதில் கெட்டிக்காரர். இவர், 2001ல், நலிவடைந்த பாரத் அலுமினியம் நிறுவனத்தை கையகப்படுத்தி, இன்று லாபகரமான நிறுவனமாக உருவாக்கியவர்.
விருப்பம்
இதுபோல, பல நிறுவனங்களை கையகப்படுத்தி வெற்றி கண்ட இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, தற்போது, 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இவரது வேதாந்தா குழுமத்தின் கீழ், ஸ்டெர்லைட், ஹிந்துஸ்தான் ஜின்க், சீசா கோவா, கெய்ரன் உள்ளிட்ட நிறுவனங்கள், உலோகம், சுரங்கம், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன. ‘‘இந்தியாவில், தொழில் முனைவோரிடம் தற்போது ஏற்பட்டுள்ள முனைப்பு, பொதுத் துறை நிறுவனங்களின் அளப்பரிய ஆற்றலை வெளிக்கொண்டு வர உதவும்; இது, அரசின், தொழில்மயமாக்கல் கொள்கைக்கு வலுசேர்க்கும்,’’ என, அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை, 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த, வேதாந்தா விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|