பதிவு செய்த நாள்
18 டிச2020
22:44
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனும், பி.எப்., பணத்துக்கான மொத்த வட்டித் தொகையும், டிசம்பர் கடைசிக்குள் வழங்கப்பட்டு விடும் என்று, தொழிலாளர் நலத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், ஆறு கோடி தொழிலாளர்களின் கண்ணுக்குத் தெரியாத ஓய்வூதிய சேமிப்பு என்பது, பி.எப்., தான். தொழிலாளர்களின் சம்பளத்தில் செய்யப்படும் பிடித்தமும்; அதற்கு இணையாக, நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பும் சேர்ந்து தான், பி.எப்., இருப்பு வளர்ந்து வருகிறது. இந்தத் தொகைக்கு, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், நிதித் துறையோடு சேர்ந்து, தொழிலாளர் துறை எவ்வளவு வட்டி வழங்கலாம் என்பதை முடிவு செய்யும்.
சிக்கல்
கடந்த 2019 –- 20 நிதியாண்டுக்கான பி.எப்., வட்டி, 8.5 சதவீதம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2012- – 13 நிதிஆண்டுக்குப் பின், இவ்வளவு குறைவாக வட்டி கிடைப்பது இப்போது தான். இதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், மொத்த வட்டித் தொகையும் உடனடியாக வழங்கப்பட மாட்டாது என்று, பி.எப்., நிறுவனம் தெரிவித்தது.
முதலில், 8.15 சதவீதத் தொகையும், பின், 0.35 சதவீத வட்டித் தொகையுமாக, இரு தவணைகளில் வட்டித் தொகை, பி.எப்., கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
ஆறு கோடி
பொதுவாக, ஒவ்வொரு நிதியாண்டு முடிந்தஉடன், வட்டித் தொகை, பயனர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த, 2019 – -20 நிதியாண்டு என்பது, மார்ச் 2020 உடன் முடிந்துவிட்டது. 8.5 சதவீத வட்டித் தொகை, ஏப்ரல் 1ம் தேதி, அவரவர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போது டிசம்பர் கடைசியில் தான் வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என்றால், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்துக்கு கூட்டு வட்டி போட்டுக் கொடுப்பரா? அல்லது கடந்த ஆண்டுக்கான வட்டி மட்டும் தான் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், ஒரு பயனரின் பி.எப்., கணக்கில், 10 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது என்றால், அவருக்கு, 8.5 சதவீத வட்டி எனில், 85 ஆயிரம் ரூபாய் ஏப்ரல், 1ல் கிடைத்திருக்கும். அந்தத் தொகை அப்போதே போடப்பட்டிருக்கும் என்றால், அதில் இருந்து, அவசர தேவைக்கு அவர் கடன் பெற்று பயன்படுத்தி இருக்கலாம் அல்லது அது, கூட்டு வட்டியில் குதுாகலமாக வளர்ந்து செழித்திருக்கும்.
ஆச்சரியம் என்னவென்றால், யாரும் இந்த விஷயத்தில் இதுவரை வாய் திறந்ததாக தெரிய வில்லை. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் இந்தச் சமயத்தில், பி.எப்., இருப்புக்கு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களுக்கும், கூட்டு வட்டி போட்டு, அரசு வழங்குமானால், ஆறு கோடி தொழிலாளர்கள் வயிற்றில் பாலை வார்த்தார் போல் இருக்கும்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|