பதிவு செய்த நாள்
27 டிச2020
21:49
ஜனவரி 1, 2021 முதல், உங்கள் காசோலைகளின் பாதுகாப்பு, பன்மடங்கு உயரப் போகிறது. இதற்கென்று ஒரு புதிய யுக்தி பின்பற்றப்படவிருக்கிறது. அது என்ன?
காசோலைகள் வழங்குவதிலும், பெறுவதிலும் ஏற்படும் சிக்கல்களைப் பலரும் சந்தித்து வருகின்றனர். இணையம் வழியாகப் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான வசதிகள் பெருகிய பின்னரும், இன்னமும் காசோலைப் புழக்கம் அதிகமாகவே உள்ளது.
‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’
பல அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் போலிகளும், ஏமாற்றல்களும் இதில் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.வாடிக்கையாளரின் பணத்தைப் பாதுகாக்க, இந்திய ரிசர்வ் வங்கி, ‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ என்ற நடைமுறையை, ஜனவரி, 1 முதல் அமல் செய்யவிருக்கிறது.இதன்படி, ஒரு காசோலையை இன்னொருவருக்குக் கொடுப்பதற்கு முன்பே, காசோலையின் எண், தேதி, தொகை, வழங்கப்படுபவரது பெயர் ஆகியவற்றை, உங்களது வங்கிக்கு குறுஞ்செய்தி, மொபைல் செயலி, இணைய சேவை, ஏ.டி.எம்., போன்றவற்றின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இத்தகவல்கள், வங்கிகளின் மொத்த பின்னணி நெட்வொர்க்கான, ‘சி.டி.எஸ்.,’ மூலம் பரிமாற்றம் செய்யப்படும். உங்களது காசோலையைப் பெற்றுக் கொண்டவர், அதை வங்கியில் பணமாக்குவதற்கு வழங்கும்போது, நீங்கள் அளித்த விபரத்தோடு ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னரே அவருக்கு உரிய தொகை வழங்கப்படும்.தற்சமயம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு இந்த நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.
இப்போதைக்கு இந்தச் சேவையைப் பெறுவது அவரவர் விருப்பத்துக்குட்பட்டது; கட்டாயமில்லை என்றே, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு, ‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.காசோலை பெற்றவர் தான், உரிய தொகையைப் பெற்றுக் கொண்டாரா என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். வங்கியே இந்த உறுதிப்படுத்துதலுக்கு உதவுகிறது.
சந்தேகம்
போர்ஜரி காசோலைகளின் மூலம், பணத்தை அள்ளும் கூட்டத்துக்குப் போடப்பட்டுள்ள கடிவாளம் இது. உங்களுக்கு தெரியாமல், 1 ரூபாய் கூட உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து வெளியே போக முடியாது.ஆனால், இது எப்படி நடைமுறைக்கு வரும் என்பதில் தான் குழப்பம் நிலவுகிறது. ஒரு நாளில், இந்தியாவில் கோடிக்கணக்கான காசோலைகள் வழங்கப்படுகின்றன. காசோலைகளை வழங்கும் தனிநபர்களை விடுங்கள்; நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவை எல்லாம் ஒவ்வொரு காசோலைக்கான விபரத்தையும் வங்கிக்குத் தெரிவிப்பது யதார்த்தத்தில் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
சி.டி.எஸ்., சிஸ்டத்தில் ஏற்கனவே காசோலைகள் புகைப்படமெடுக்கப்பட்டு, வங்கிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டே, கிளியர் செய்யப்படுகின்றன.இதோடு, ஒவ்வொரு காசோலையின் விபரமும், பொதியப்பட்ட தகவலும் வங்கிகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்; மிகப்பெரிய நடைமுறை இது.வாடிக்கையாளர் தரப்பில் இதற்கான வரவேற்பு எவ்வளவு துாரம் இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்த, ‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ விருப்பம் தெரிவிப்பவருக்கு மட்டுமே என்று சொல்லப்பட்டுள்ளது.
இரட்டைப் பூட்டு
இருப்பினும், முதலில்எல்லாருக்கும் இந்த வசதியை வழங்கிவிட்டு, வேண்டாம் என்போர் இதில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுமோஎன்ற சந்தேகம் எழுப்பப் படுகிறது. இதற்கு மாறாக, வங்கிகள் அனைத்து வாடிக்கையாளருக்கும், ‘இ – மெயில், எஸ்.எம்.எஸ்.,’ ஆகியவற்றின் மூலம், இந்த வசதியைப் பெறுவதற்கு விரும்புகிறீர்களா என்பதைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு இவ்வசதியை வழங்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
ஒருவேளை, இவ்வசதி அனைவருக்கும் அமலாகி, நாளை காசோலைகள் கிளியரன்சுக்கு வந்து, அங்கே, போதுமான விபரங்கள் வழங்கப்படவில்லை.அதனால், இது கிளியர் செய்யப்படமாட்டாது என்ற நெருக்கடியான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்று கவலைப்படுவோர் உள்ளனர்.வாடிக்கையாளர்களுக்கு கிடைத்திருக்கும் கெட்டியான இரட்டைப் பூட்டு இது. தேவைப்படுவோர் மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதிப்பதே சிறந்தது.-
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|