பதிவு செய்த நாள்
27 ஜன2021
06:23
புதுடில்லி : ‘வாட்ஸ்ஆப்’ செயலி மூலமாக, சேவைகளை வழங்கத் துவங்கிய பல வங்கிகள், தற்போது அத்தகைய சேவைகளை வழங்குவது குறித்து மறுபரிசீலனையில் இறங்கி உள்ளன. எச்.டி.எப்.சி., வங்கி, காரணம் குறிப்பிடாமல், இச்சேவையை நிறுத்தி வைத்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கி, என பல முன்னணி வங்கிகள், தங்களுடைய சேவைகளை, ‘வாட்ஸ்ஆப்’மூலமாக வழங்கி வருகின்றன. ‘நெட் பேங்கிங்’, ‘மொபைல் பேங்கிங்’ ஆகியவற்றை விட, எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும், ‘வாட்ஸ்ஆப்’ மூலமாகவே சேவைகளை எளிதாக பெறலாம் என்பதால், வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், அண்மையில், ‘வாட்ஸ்ஆப்’ நிறுவனம், தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில், சில மாற்றங்களை அறிவித்தது. ‘வாட்ஸ்ஆப்’ பயன்படுத்துபவர்களின் தகவல்கள், அதன் தாய் நிறுவனமான, ‘பேஸ்புக்’ உடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவித்தது. இதனையடுத்து, பலர், ‘வாட்ஸ்ஆப்’ செயலிக்குப் பதிலாக, ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு சில செயலிகளுக்கு மாறத் துவங்கினர். இதன் தொடர்ச்சியாக, இப்போது வங்கிகளும் தங்களது, ‘வாட்ஸ்ஆப்’ சேவை குறித்து, மறுபறிசீலனையில் இறங்கி இருக்கின்றன.
எச்.டி.எப்.சி., வங்கி, தற்போது, ‘வாட்ஸ்ஆப்’ மூலமாக வழங்கும் சேவைகளை, நிறுத்தியுள்ளது. இருப்பினும், என்ன காரணத்துக்காக, சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வங்கிகள் தரப்பில், தங்களுடைய, ‘வாட்ஸ்ஆப்’ சேவைகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவித்து வந்தாலும், இன்னொரு பக்கம், இந்த சேவையை தொடர்வது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|