பதிவு செய்த நாள்
14 பிப்2021
22:29
பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக கருதப்படும் அரசு பத்திரங்களில் சிறுமுதலீட்டாளர்கள், நேரடியாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை பரவலாக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அண்மையில், சிறுமுதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக, ‘ரீடைல் டைரக்ட்’ எனும் வசதி அறிமுகம் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடன் வாங்கும் திட்டத்திற்கு உதவுவதோடு, இந்த வாய்ப்பு சிறு முதலீட்டாளர்கள் கடன்சார் முதலீட்டை மேலும் பரவலாக்கி கொள்ள உதவும் என கருதப்படுகிறது. வைப்பு நிதி முதலீட்டிற்கு போட்டியாக இது அமையலாம் என்றும் கருதப்படுகிறது.
அரசு பத்திரங்கள்
அரசு பத்திரங்கள் என்பவை, கடன் மூலம் நிதி திரட்டுவதற்காக அரசால் வெளியிடப்படும் பத்திரங்களாகும். ’ஜி-செக்ஸ்’ என பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த பத்திரங்கள், அரசு சார்பில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. இவை கடன்சார் முதலீடாக அமைகின்றன. இவற்றில் பிரதானமாக இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையான கரூவூல பில்கள் 19 நாட்கள், 182 நாட்கள் அல்லது 356 நாட்கள் என குறைந்த கால முதிர்வு கொண்டவை. ‘டேட்டட் செக்யூரிட்டீஸ்’எனப்படும் இரண்டாம் வகை பத்திரங்கள் நீண்ட கால நோக்கிலானவை. இவை ஐந்து முதல் 40 ஆண்டு கால முதிர்வு கொண்டவை.இந்த பத்திரங்கள் அரசால் வெளியிடப்படுவதால் மிகவும் பாதுகாப்பானவை.
இவற்றில் எந்த வித கிரெடிட் ரிஸ்கும் கிடையாது. ஆனால், வட்டி விகித ரிஸ்க் உண்டு. அதாவது, வட்டி விகித போக்க்கிற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும் வாய்ப்புள்ளது. இருப்பினும் முதிர்வு வரை வைத்திருந்தால், இந்த இடரையும் திறம்பட எதிர்கொள்ளலாம். வைப்பு நிதி போலவே இந்த பத்திரங்களும் வரி விதிப்புக்கு உட்பட்டவை.
ஓராண்டுக்கு பிறகு இவற்றை விற்பனை செய்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி உண்டு. ஓராண்டுக்கு முன் விற்பனை செய்தால், வரி வரம்பு விகிதம் பொருந்தும்.புதிய வாய்ப்புபொதுவாக, அரசு பத்திரங்கள் முதலீடு என்பது வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட்கள் போன்ற நிறுவன முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. சிறுமுதலீட்டாளர்கள் இதில் மறைமுகமாக பங்கேற்கலாம் என்றாலும், இந்த பத்திரங்களின் பணமாக்கும் தன்மை பெரிய தடையாக கருதப்படுகிறது. இவை பெரிய அளவிலேயே பரிவர்த்தனை செய்யப்படுவதால், சிறுமுதலீட்டாளர்கள் விற்று வெளியேறுவது என்பது கடினமானது.
தேசிய பங்குச்சந்தையின் என். எஸ்.இ.,கோபிட் செயலி மூலம், இதில் சிறுமுதலீட்டாளர்கள் பங்கேற்க வழி இருந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.இந்நிலையில், தற்போது சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய, ‘ரீடைல் டைரக்ட்’ மேடை மூலம் கணக்கு துவக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறுமுதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை வாங்குவது எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட கால நோக்கில் முதலீட்டை நாடும், வட்டி வருமானம் எதிர்பார்க்கும் ஓய்வு பெற்ற நபர்கள் உள்ளிட்டோருக்கு, இந்த முதலீடு ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த பத்திரங்களின் தன்மையை முழுவதுமாக புரிந்து கொண்டு இதில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் பண்ட்கள் வாயிலாக இவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|