பதிவு செய்த நாள்
16 பிப்2021
11:52
கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து, கிட்டத்தட்ட மீண்டுவிட்ட நிலையில், மூலப்பொருட்கள் விலையேற்றம் என்பது, தொழில் துறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் அரசு விழா, திருவிழா, திருமணம், காதுகுத்து என அனைத்தும் தடைபட்டிருந்தது.இதுபோன்ற விழாக்களையே நம்பியிருக்கும், ஒலி, ஒளி, மேடை, பந்தல், ஷாமியானா, மணவறை என பல்வேறு பொருட்களை வாடகைக்கு விடும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், நிதியுதவி மற்றும் சலுகைகள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.தற்போது, திருமணம், காதுகுத்து என சுப நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் இதை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகின்றனர்.சுப நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால், பாதிப்புகளில் இருந்து மீள சற்று தாமதமாகும் வாய்ப்புள்ளது.
ஆனால், இத்தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களது வாழ்க்கைக்கு பிரகாசம் அளிக்கும் அச்சாரமாக தமிழக சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது.தற்போது, முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தேசிய தலைவர்கள் என பலரும், தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசியல் பொதுக்கூட்டங்கள், மாநாடுக்கு மேடை, பந்தல் அமைப்பாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது.சிறிய மேடைகள் முதல் மைதானங்களில் பெரிய மேடைகள் வரை அமைக்கப்படுகின்றன. நுழைவு வாயிலில் வாழை, கரும்பு அலங்கரிப்பு, தோரணங்கள், சேர், பந்தல் என பல்வேறு தேவைக்கும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. தக்க சமயத்தில் அரசியல் தலைவர்களின் பிரசாரங்கள் கை கொடுத்துவருவது இத்தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் (ஒலி, ஒளி, ஜென்செட், பந்தல், ஷாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், ஸ்டேஜ் டெக்கரேஷன் மற்றும் மணவறை அமைப்பாளர்களின் கூட்டமைப்பு) மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் கூறுகையில், ‘‘கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு பழையபடி பணியில் கால்பதிக்க துவங்கிவிட்டோம். மேலும், தேர்தல் பிரசாரமும் நடந்து வருவதன் வாயிலாக எங்களது தொழில் மீண்டு வருகிறது எனலாம்,’’ என்றார்.
ரூ.15 ஆயிரம் முதல் 15 லட்சம் வரை!
அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு மேடை, சேர் தேவை அதிகரித்துள்ளது. சாதாரணமாக ரோட்டோரம் போடப்படும் சிறிய மேடை, சேர், லைட் உள்ளிட்டவற்றுக்கு, 15 ஆயிரம் வரை செலவாகிறது. மாநாடு, கட்சி தலைவர்கள் வருகை புரியும் இடங்களுக்கு, 15 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக, இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|