பதிவு செய்த நாள்
14 மார்2021
21:11
ஆன்லைனில் பொருட்களை வாங்குபவரா நீங்கள்? உங்களுடைய கடன் மற்றும் பற்று அட்டை விபரங்கள் திருடு போய்விடுமோ என்று இனி அஞ்ச வேண்டியதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு ஒரு வழிமுறையை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில், இணைய வழி பணப் பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டு களாக பெருகி வருகின்றன. ஆன்லைனிலும், அலைபேசி வழியாகவும் இந்தப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. வழக்கம்போல், இதில் ஏராளமான குறைபாடுகளும், புகார்களும் எழுந்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்து கொட்டும் புகார்கள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகின்றன. அதுவும் பணப் பரிமாற்றம், ‘ஆன்லைன்’ வர்த்தகம் தொடர்பான புகார்கள் தான், 44 சதவீதம்.
62 சதவீத புகார்கள்
தனியார், வெளிநாட்டு வங்கிகளை விட, பொதுத் துறை வங்கிகள் மீது தான், 62 சதவீத புகார்கள்.இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு தடை உத்தரவை விதித்திருக்கிறது. ‘பேமென்ட் அக்ரிகேட்டர்’கள் மற்றும் ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனங்கள், வாடிக்கையாளர் களது கடன் மற்றும் பற்று அட்டை விபரங்களைச் சேமித்து வைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
அதாவது, நீங்கள் இணைய வழியாகப் பொருட்களை வாங்கப் போகும்போது, உங்கள் கடன் அல்லது பற்று அட்டை விபரங்களைக் கேட்டு, வங்கியோடு தொடர்பு கொண்டு, பணப் பரிவர்த்தனைக்கு உதவுபவை இந்த, ‘பேமென்ட் அக்ரிகேட்டர்’கள் மற்றும் ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனங்கள்.அப்படி செய்யும்போது, உங்களுடைய சவுகரியத்துக்காக, அவை உங்கள் கடன் அல்லது பற்று அட்டையின் விபரங்களை தங்களுடைய, ‘சர்வர்’களில் சேமித்து வைத்துக் கொள்வர்.
அடுத்த முறை நீங்கள் அதே சேவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யும்போது, மீண்டும் அட்டை விபரங்களை பதிவிட வேண்டாம். ஏற்கனவே, சர்வரின் நினைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் வந்து உதவி செய்யும்.நீங்கள், ‘பாஸ்வேர்டு’ அல்லது ஓ.டி.பி., எண்ணைப் பெறுவதன் மூலம், பணப் பரிவர்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இப்படி சேமிக்கப்படும் விபரங்களில் தான் சிக்கல் என்று கருதுகிறது, ஆர்.பி.ஐ., அதற்கு ஒரு பாதுகாப்பு நெறிமுறையை அறிமுகம் செய்துள்ளது.ஜூலை மாதம் முதல், இந்தப் பாதுகாப்பு நெறிமுறைகளை, ‘பேமென்ட் அக்ரிகேட்டர்’கள் மற்றும் ‘பேமென்ட் கேட்வே’ நிறுவனங்கள் பின்பற்றுமானால், உங்கள் தகவல்கள் சேமிக்கப்படலாம். இல்லையெனில், சேமிக்கக் கூடாது.
விழிப்புணர்வு இல்லை
இதன் அர்த்தம் என்ன? இனிமேல், இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒரு, ‘டி – சர்ட்’டோ, உணவுப் பண்டமோ, மொபைல் போனோ, ‘ஆர்டர்’ செய்கிறீர்கள் என்றால், உங்கள் கடன் அல்லது பற்று அட்டையின், 16 இலக்க எண்ணையும் முழுமையாக பதிவு செய்வதோடு, பெயர், அட்டை காலாவதியாகும் மாதம், ஆண்டு ஆகியவற்றை ஒவ்வொரு முறையும் பதிவு செய்ய வேண்டும்.
கொஞ்சம் சிரமம் தான். இதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ளவா முடியும் அல்லது போகிற இடமெல்லாம் கையில் அட்டையை துாக்கிக் கொண்டா அலைய முடியும்? வாடிக்கையாளர் பொருட்களை எளிதாக வாங்குவதை, இந்தப் புதிய நடைமுறை சிக்கலாக்குகிறது என்றெல்லாம் கடுமையாக குற்றச்சாட்டுகளை இணைய வணிக நிறுவனங்களும், இத்துறை நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பெருகி வரும் இணைய பணப் பரிமாற்றக் குற்றங்களைப் பார்க்கும்போது, இரண்டு அம்சங்கள் முக்கியமாகின்றன. ஒன்று, இது போன்ற வருமுன் காத்தல் நடவடிக்கை. இரண்டு, நிதி குறித்த கல்வியறிவு. ஆங்கிலத்தில் இதை, ‘பைனான்சியல் லிட்டரசி’ என்பர்.ஒருபக்கம், கடன் செயலிகள் இன்று கொடிகட்டிப் பறக்கின்றன.
இன்னொரு பக்கம், கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாயை மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யும் அப்பாவி மத்தியமர்கள்.பிரச்னையின் வேர், இவர்கள் எவருக்கும் நிதி குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது தான்.மக்களின் அறியாமையில் தான், குற்றவாளிகள் குளிர் காய்கின்றனர். நிதி குறித்த அறியாமையை துடைத்தெறிவது, ஆர்.பி.ஐ.,யின் கடமை.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|