பதிவு செய்த நாள்
23 மார்2021
20:57
புதுடில்லி: ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட, மெய்நிகர் நாணயங்களில், மக்கள் முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
பிட்காய்ன் உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ நாணய பரிவர்த்தனைக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந் நிலையில் ஆதார் கார்டு, யு.பி.ஐ., பேமென்ட் உள்கட்டமைப்பு, பாஸ்டேக் ஆகிய பல டிஜிட்டல் முன்னேற்றங்களில் முக்கிய பங்கு வகித்த நந்தன் நிலேகனி, ஆன்லைன் நாணயங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாம் ஆன்லைன் நாணயங்களை முதலீட்டுக்கான ஒரு வழியாக கருதி, அதில் மக்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு, 100 கோடி பரிவர்த்தனைகளை இலக்காக கொண்டு செயல்படும், யு.பி.ஐ., பேமென்ட் போல, ஆன்லைன் நாணயங்கள் வேகமாக செயல்படாது. ஆனால், இவற்றிடம் மகத்தான மூலதனம் இருக்கிறது.
ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது குறித்து, நாட்டின் கட்டுபாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. நமக்கு அப்படி ஒரு நிலையான நாணயம் தேவையா என்பது தெரியவில்லை. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பிட்காயினை பயன்படுத்தி, எப்படி தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என, பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதலீடு
இந்தியாவில் கிட்டத்தட்ட, 75 லட்சம் பேர், ஆன்லைன் நாணயங்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை, 10_15 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|