பதிவு செய்த நாள்
24 மார்2021
19:11
புதுடில்லி:கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டு முடிந்த நிலையில், அதனால் அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த, 2020 மார்ச், 25ல் நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வேலை இழந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், இந்தியபொருளாதார கண்காணிப்பு மையமான – சி.எம்.ஐ.இ., வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:
ஊரடங்கால், 2020 ஏப்ரலில் வேலையில்லா திண்டாட்டம், 23.5 சதவீதமாக உயர்ந்தது. இது, மே மாதம், 21.7 சதவீதமாக குறைந்து, ஜூனில், 10.2 சதவீதமாக சரிவடைந்தது. ஜூலையில், 7.4 சதவீதமாக காணப்பட்டது.ஆகஸ்டில் மீண்டும், 8.3 சதவீதம்; செப்.,ல், 6.7 சதவீதம், அக்.,ல், 7 சதவீதம்; நவ.,ல், 6.5 சதவீதமாக சரிவடைந்தது. எனினும், டிசம்பரில் வேலையில்லா திண்டாட்டம், மீண்டும், 9.1 சதவீதமாக உயர்ந்தது.
இந்தாண்டு ஜனவரியில், 6.5 சதவீதமாக சரிவடைந்தது.பிப்ரவரியில், 6.9 சதவீதமாக உயர்ந்த போதிலும், கடந்த ஆண்டு, இதே மாதத்தில் காணப்பட்ட, 7.8 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, வேலையில்லா திண்டாட்டம், 0.9 சதவீதம் குறைந்துள்ளது. இது, ஓராண்டுக்கு பின், அதாவது, கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு, நாட்டின் அனைத்து துறைகளும் திரும்பி வருவதை காட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எப்., சந்தாதாரர் உயர்வு
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, ‘ஆத்மா நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா’ திட்டத்தை, 2020 அக்., 1ல் அறிமுகப்படுத்தியது. இதில், ‘பி.எப்.,’ கணக்கில், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, தலா, 12 சதவீத தொகையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்துகிறது.
இதன் மூலம் இதுவரை, 16.5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில், 13.64 லட்சம் பேர் புதிதாக பி.எப்., கணக்கு துவக்கியோர் ஆவர். இத்திட்டத்தில், இரு ஆண்டுகளில், 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டின்,ஏப்., – ஜன., வரையிலான, 10 மாதங்களில், பி.எப்., கணக்கில், 62.49 லட்சம் தொழிலாளர்கள் இணைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு ஜனவரியில், புதிய பி.எப்., சந்தா தாரர் எண்ணிக்கை, 28 சதவீதம் உயர்ந்து, 13.36 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விபரமும், நாட்டில்வேலைவாய்ப்புகள் அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுவதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|