பதிவு செய்த நாள்
04 ஏப்2021
20:19
நிதி திட்டமிடலை மேற்கொள்ள, நிதி திட்டத்தில் மாற்றம் தேவையா என பரிசீலிக்க நிதியாண்டின் துவக்கம் பொருத்தமான தருணம். நிதி நிலை அம்சங்கள், முதலீடுகள், எதிர்கால இலக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதோடு, ஒரு சில நிதி நடவடிக்கைகளை நிதியாண்டின் துவக்கத்திலேயே செய்து முடிப்பது அணுகூலமானது.
இதன் மூலம், நிதி விஷயங்களில் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கலாம். அந்த வகையில், நிதியாண்டின் துவக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நிதி செயல்பாடுகளை அறிந்திருப்பது அவசியம்.
பி.பி.எப்., சேமிப்பு:
பி.பி.எப்., அதிகம் நாடப்படும் முதலீடு வாய்ப்பாக இருக்கிறது. வரி சேமிப்புக்கு உதவுவதோடு, ஓய்வு காலத்திற்கான முதலீடாகவும் அமைகிறது. பி.பி.எப்., பங்களிப்பை நிதியாண்டின் துவக்கத்தில் மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதுமான வட்டி பெறலாம். கடைசி நேரத்தில் மேற்கொண்டால் இந்த சாதகம் கிடையாது.
வங்கி படிவம்:
வங்கி வைப்பு நிதி அதிகம் நாடப்படுகிறது. வைப்பு நிதிக்கான வருமானம் அவரவர் வரி வரம்பிற்கு ஏற்ப வருமான வரிக்கு உட்பட்டது. எனவே, வங்கி தரப்பில், டி.டீ.எஸ் பிடித்தம் செய்யப்படும். வரி விலக்கு பிரிவில் இருப்பவர்கள், இதற்கான வங்கியில், 15 ஜி/ எச் படிவத்தை சமர்பிப்பதன் மூலம் இந்த பிடித்தத்தை தவிர்க்கலாம்.
வருமான வரி முறை:
பழைய அல்லது புதிய வருமான வரிவிதிப்பு முறையை தேர்வு செய்து கொள்ளலாம். புதிய முறையில், வரி குறைவு என்றாலும், வழக்கமான பல பிடித்தங்களை இழக்க வேண்டியிருக்கும். இரண்டு முறையில் எது ஏற்றதாக இருக்கும் என்பதை வரி செலுத்துபவர் தீர்மானிக்க வேண்டும்.
வரி ஆவணங்கள்:
வருமான வரி கணக்கை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கலின் போது பல வகையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வரி சேமிப்பு முதலீடு, பிடித்தங்கள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான ஆவணங்கள் சேகரிப்பை இப்போதே துவக்க வேண்டும். இதன் மூலம் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்.
வரி திட்டமிடல்:
வருமான வரி சேமிப்பிற்கான திட்டமிலை மேற்கொள்ள நிதியாண்டின் துவக்கமே சிறந்த தருணம். வரி பொறுப்பை கணக்கிடுவதில் இருந்து இதை துவங்கினால், பொருந்தக்கூடிய பிடித்தங்கள், கழிவுகள் தவிர எவ்வளவு வரி சேமிப்பு தேவை என தெரிந்து கொண்டு திட்டமிடலாம், அதற்கேற்ப சேமிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|