பதிவு செய்த நாள்
23 மே2021
19:16
பெருந்தொற்று சூழலில், பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள ஏற்ற வகையில் நிதி திட்டமிடல் அமைந்திருப்பது அவசியம்.கொரோனா வைரஸ் முதல் அலை பாதிப்பு முக்கிய நிதி பாடங்களை கற்றுத் தந்த நிலையில், தற்போது இரண்டாம் அலையால் மீண்டும் பொருளாதார சிக்கல்கள் உண்டாகும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், தனிநபர்கள் செலவு, சேமிப்பு மற்றும் முதலீடு என ஒவ்வொன்றிலும் தனி கவனம் செலுத்தி, அவற்றுக்கான உத்திகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இதற்கேற்ப நிதி திட்டமிடல் அமைந்திருப்பதும் அவசியம். அதிலும் குறிப்பாக, பெருந்தொற்று காலத்தில் தவிர்க்க வேண்டிய நிதி தவறுகளையும் அறிந்திருக்க வேண்டும்.
நிதி தவறுகள்
முதலீடுகளை நிறுத்துவது அல்லது விலக்கிக் கொள்வது என்பது நெருக்கடி காலத்தில் பலரும் செய்யும் தவறாக இருக்கிறது. இது தற்காலிக நிவாரணம் அளித்தாலும் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, இயன்றவரை முதலீடுகளை தொடர்வதற்கான வழிகளை ஆராய வேண்டும். வேறு வழியில்லாமல் முதலீட்டை நிறுத்த வேண்டியிருந்தாலும், நிலைமை சீராகும் போது முதலீட்டை தொடர மறக்கக் கூடாது. பங்கு முதலீட்டிற்கும் இது பொருந்தும்.
நெருக்கடி அல்லது பதற்றம் காரணமாக, பங்கு முதலீட்டை விலக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் சந்தையின் போக்கை கணித்து, பங்குகளை வாங்கி போடுவதையும் தவிர்க்க வேண்டும். பங்கு முதலீடு மற்றும் கடன்சார் முதலீட்டிற்கான விகிதம் பொருத்தமாக இருப்பதோடு, போதுமான அளவிலான தொகை வங்கி வைப்பு நிதி போன்றவற்றில் இருப்பது நல்லது.
பெருந்தொற்று காலத்தில் தவிர்க்க வேண்டிய மற்றொரு தவறு, ஓய்வு கால நிதியை விலக்கிக் கொள்வதாகும். பணியிழப்பு அல்லது மருத்துவ நெருக்கடி ஏற்படும் போது, பி.எப்., உள்ளிட்ட ஓய்வு கால நிதியை நாடுவது தவிர்க்க இயலாததாக அமையலாம். ஆனால், இதை கடைசி வாய்ப்பாக மட்டுமே வைத்து, மாற்று வழிகளை ஆராய வேண்டும். விலக்கிக் கொள்ளும் தொகையை பின்னர் ஈடு செய்வதற்கான திட்டத்தையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.
செலவு பழக்கம்
திட்டமிட்டு செலவு செய்வது மற்றும் செலவு பழக்கத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தையும் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கின்றனர். அத்தியாவசிய செலவுகள் தவிர, மற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதை தொடர்வது நல்லது. செலவுகளை குறைப்பது நிலைமையை சமாளிக்க உதவுவதோடு, சேமிப்பையும் தொடர வழி வகுக்கும்.
வாய்ப்புள்ளவர்கள் தங்கள் சேமிப்பையும் அதிகரிக்கலாம். அவசர கால தேவைக்கான தொகையை உருவாக்கி வைத்திருப்பதோடு, அதன் பணமாக்கும் தன்மையையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவசர கால நிதியில் உள்ள தொகையை அதிகரிப்பதும் நல்லது.
செலவுகளை திட்டமிடுவது போலவே, கடன் நிர்வாகமும் முக்கியம். ஏற்கனவே கடன் பெற்றுள்ளவர்கள், மாதத் தவணையை தவறாமல் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக கடன் வாங்குவது எளிதாக அமைந்திருந்தாலும், தேவையில்லாமல் கடன் வசதியை நாடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் இருந்தால், அதிக வட்டி கடனை அடைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். கடன் சீரமைப்பு வசதியை நாடுவதாக இருந்தால், அதன் நீண்ட கால சாதக, பாதக அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். வருமானத்திற்கும், கடனுக்குமான விகிதம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|