பதிவு செய்த நாள்
08 ஜூலை2021
19:18
புதுடில்லி:பிரிட்டனை சேர்ந்த,‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனத்துக்கு எதிரான வரி விவகாரத்தில், இந்திய அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.கெய்ர்ன் நிறுவனம், பாரீஸில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை முடக்குவதற்கு, பிரான்ஸ் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. கடந்த 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரத்து, 750 கோடி ரூபாயை, இந்தியஅரசு தர வேண்டும் என, கெய்ர்ன் தெரிவித்து உள்ளது.
அத்துடன் தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்தது. இந்நிலையில், பாரீஸில் உள்ள 20 இந்திய சொத்துக்களை முடக்குவதற்கான பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுள்ளது.
இச்சொத்துக்கள், சென்ட்ரல் பாரீஸில், கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாகும் என்றும், இவை இந்திய அரசு அமைப்புகள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.சென்ட்ரல் பாரிஸில் இந்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பு ரியல் எஸ்டேட் சொத்துக்களை முடக்குவது குறித்த கெய்ர்ன் விண்ணப்பத்தை, ஜூன் 11ம் தேதி, பிரெஞ்சு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதற்கான சட்ட நடவடிக்கைகள் நேற்று மாலை நிறைவடைந்தது.தற்போது, இந்த குடியிருப்புகளில் வசிக்கும் இந்திய அதிகாரிகளை, ‘கெய்ர்ன்’ நிறுவனம் வெளியேற்ற வாய்ப்பில்லை என்றாலும், இந்த நீதிமன்ற உத்தரவுக்கு, இந்திய அரசாங்கத்தால் அச்சொத்துக்களை விற்க முடியாது.கடந்த மாதம் அமெரிக்காவில், ‘ஏர் இந்தியா’ விமானங்கள் மற்றும் அதன் சொத்துக்களை முடக்குவதற்கான வழக்கை நியூயார்க்கில், கெய்ர்ன் நிறுவனம் தொடர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைப்போலவே உலகின் பல்வேறு நாடுகளிலும் வழக்கு தொடரும் முயற்சியில் இருக்கிறது, கெய்ர்ன் நிறுவனம்.இவ்விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இதுவரை பிரான்ஸ் நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தும் எவ்விதமான அறிவிப்பையோ, உத்தரவையோ பெறவில்லை. உண்மை நிலை குறித்து அறிய அரசு முயற்சித்து வருகிறது.
இதுபோன்ற உத்தரவுகள் வரும்போதெல்லாம், அரசு, இந்தியாவின் நலனை பாதுகாக்கும் வகையில், ஆலோசனைகள் பெற்று, சட்ட ரீதியான தீர்வுகள் எடுக்கப்படும். இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.பாரீஸ் நகரில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் இந்திய அதிகாரிகளை, ‘கெய்ர்ன்’ நிறுவனம் வெளியேற்ற வாய்ப்பில்லை என்றாலும், இந்த நீதிமன்ற உத்தரவுக்கு பின், இந்திய அரசாங்கத்தால் அச்சொத்துக்களை விற்க முடியாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|