பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
21:10
புதுடில்லி:ஜி.எஸ்.டி., வரியினங்களை, ஐந்தில் இருந்து மூன்றாக குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரியில் 0.25 சதவீதம், 5,12,18 மற்றும் 28 சதவீதம் என, ஐந்து வரியினங்கள் உள்ளன.இது குறித்து ‘அசோசெம்’ கருத்தரங்கில், கே.வி.சுப்ரமணியன் கூறியதாவது:மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யில் மூன்று வரியினங்களைத் தான் அறிமுகப்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், நிர்வாக வசதிக்காக, ஐந்து பிரிவுகள் அமல்படுத்தப் பட்டன. இதுவும் மிகச் சிறந்தது என்பேன்.
ஏனெனில், எந்தெந்த வரியினங்களில் எவ்வளவு வரி வசூலாகிறது என்பதை அறிய முடிகிறது. அதற்கேற்ப, கொள்கைகளை வகுப்பது சுலபமாக உள்ளது. எனினும் ஜி.எஸ்.டி., யில் சீர்திருத்தம் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஐந்து வரியினங்களை மூன்றாக குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த சீர்திருத்தம் நடைபெறும் என நம்புகிறேன்.
மேலும், மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை விட, அவற்றின் மூலம் தயாரிக்கப் பட்டு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் வரி அதிகமாக உள்ளது தொடர்பான பிரச்னைகளும் சரி செய்யப்படும். உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
ஆனால், வங்கித் துறை, உலக வங்கிகளுக்கு நிகராக மேலும் வளர வேண்டும். உலகின் மிகப்பெரிய, 50 வங்கிகள் பட்டியலில், இந்திய வங்கிகள் இடம் பெற வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 55வது இடத்தில் உள்ளது.உலகின் 100 பெரிய வங்கிகள் பட்டியலில், அமெரிக்காவின் 12 வங்கிகள்; சீனாவின் 18 வங்கிகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|