பதிவு செய்த நாள்
08 ஆக2021
19:02
வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், வைப்பு நிதி முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி ஒரு அலசல்.ரெப்போ விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இருக்கிறது. வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான இந்த விகிதம் தற்போது 4 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் நிலவும் குறைந்த ரெப்போ விகிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் உயருமா?
குறைந்த வட்டி விகித போக்கால், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வைப்பு நிதிக்கு குறைவான வட்டி விகிதத்தை வழங்கி வரும் நிலையில், சராசரி முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். ரெப்போ விகிதம் அண்மை காலத்தில் உயர்த்தப்படவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் ரொக்க கையிருப்பு விகிதத்தை இரண்டு முறை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
பொதுவாக ரொக்க கையிருப்பு விகிதம் உயர்த்தப்படுவது, அமைப்பில் உள்ள பணப் புழக்கத்தை உறிஞ்சி, வட்டி விகிதம் உயர வழி செய்யும் என்று கருதப்படுகிறது. மேலும், ஒரு சில வங்கிகள், குறிப்பிட்ட கால அளவிற்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளன. எனவே, வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயரும் சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய கால முதலீடு
வட்டி விகிதம் மிகவும் குறைந்து, பின் மீண்டும் உயரத் துவங்கும் போது, முதலில் குறைந்த மற்றும் நடுத்தர கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமே உயரத் துவங்கும் என கருதப்படுகிறது.
எனவே, தற்போது முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், நீண்ட கால அளவை நாடாமல், குறுகிய கால அளவை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.அதே போல, வைப்பு நிதி முதலீடு முதிரும் நிலையில் இருப்பவர்கள் அந்த தொகையை விலக்கிக் கொண்டு, மீண்டும் முதலீடு செய்யும் போது குறுகிய கால அளவில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், பின்னர் வைப்பு நிதி முதிர்வடையும் போது, அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.
மேலும் பெரிய தொகையாக இருந்தால், அதை பகுதி பகுதியாக பிரித்து, ஒன்று முதல் ஐந்தாண்டு வரையிலான கால அளவில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், குறைவான கால தொகை முதிர்வடையும் போது, அப்போதைய வட்டி விகிதத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.இது தவிர, மாறும் வட்டி விகித வைப்பு நிதி மற்றும் மாறும் வட்டி விகித பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம் என்கின்றனர்.
ஒரு சில வங்கிகள், தற்போது மாறும் வட்டி விகித வைப்பு நிதி வசதியை அளிக்கின்றன. ஏழு ஆண்டு முதிர்வு காலம் கொண்டதாக மாறும் விகித பத்திரங்களை பொறுத்தவரை, தற்போது 7.15 சதவீத பலன் அளிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|