பதிவு செய்த நாள்
08 ஆக2021
19:20
கொரோனா காரணமாக, வீட்டுக்கடனை மறுசீரமைப்பு செய்துவிட்டேன். தொழிலுக்கு கடன் தேவைப்படுகிறது. கடன் கேட்டால், மறுசீரமைப்பு செய்ததை காரணம் காட்டி, கடன் தர மறுக்கின்றனர். இதற்கு வேறு வழி உள்ளதா?
ஆறுமுகசாமி, சிவகாசி.
இல்லை. வீட்டுக்கடன் மறுசீரமைப்பு வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தியவுடனே, உங்கள் கிரெடிட் ஸ்கோரில், ‘ரீஸ்ட்ரக்சர்டு’ என்ற சொல் இடம் பெற்று இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி உங்களுக்குக் குறைவு என்றே இதற்கு வங்கிகள் பொருள் கொள்ளும்.
பங்குச் சந்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவில்லை என்பதால், என் முதலீட்டுக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அஞ்சலகத்தை தேர்வு செய்துள்ளேன். என் முடிவு உசிதமானதா?
சா.முத்து. கோவை.
தெரியாத முதலீட்டு இனங்களில் தலையை நுழைக்காமல் இருப்பதற்கு பாராட்டுகள். இது உங்கள் பணம். அதை ஈட்டுவதற்கு நீங்கள் பட்ட சிரமங்கள் உங்களுக்குத் தான் தெரியும். அந்தத் தொகையை, உங்களுக்கு நன்கு தெரிந்த முதலீட்டு இனங்களில் முதலீடு செய்வதே சரியான அணுகுமுறை. அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள் என்று பலர், தெரியாத இனங்களில் முதலீடு செய்து, திண்டாடுவதைப் பார்க்கிறேன்.
அமெரிக்கா சென்று வந்தால், எவ்வளவு டாலரை கரன்சியாக கொண்டு வரலாம்? வங்கி பரிவர்த்தனையில் வரும் தொகைக்கு கணக்கு காட்ட வேண்டுமா?
கோ.கேசவன், ஆவடி.
எவ்வளவு டாலர் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ரொக்கமாக 5,000 டாலருக்கு மேல் இருந்தாலோ, ரொக்கத்தோடு, ‘டிராவலர்ஸ் செக்’கும் சேர்ந்து, 10 ஆயிரம் டாலருக்கு மேல் இருந்தாலோ, அந்த விபரத்தை, ‘கரன்சி டிக்ளரேஷன்’ படிவத்தில் குறிப்பிட்டு, சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வங்கிப் பரிவர்த்தனை என்ன விதமானது என்று தெரிய வேண்டும். உங்க மகனோ அல்லது மகளோ பணம் கொடுத்தால், அது ‘பரிசாக’ கருதப்படும்.
சொந்த வீடு, எப்.டி., மியூச்சுவல் பண்ட், ஷேர், நாமினல் பென்ஷன் என்று வைத்துள்ளேன். 2013 முதல் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. சரி செய்ய என்ன வழி?
காந்தி.எம்.ஜி, பூந்தமல்லி.
நல்ல ஆடிட்டரைப் பாருங்கள். கடந்த ஆண்டுகளில் உங்கள் வருவாய், வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் அளவுக்கு இருந்ததா என்பதை அவர் கணக்கிட்டுச் சொல்வார். இருந்தது என்றால், உரிய வரியைச் செலுத்திவிடுங்கள். தற்போது, வருமான வரித் துறையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்பட ஆரம்பித்துள்ளன. அரசாங்கம், வரி செலுத்த வேண்டியவர்களை, சல்லடை போட்டுத் தேடிக் கண்டுபிடித்து, வரி செலுத்தச் சொல்கிறது என்பது ஞாபகம் இருக்கட்டும்.
‘எஸ்.ஆர்.இ.ஐ., இன்பிராஸ்ட்ரக்சர் எக்விப்மென்ட் பைனான்ஸ் என்.சி.டி.இ.,’யில் முதலீடு செய்து உள்ளேன். இது முதிர்வு அடைந்து, ஆறு மாதம் ஆகிறது. இதுவரை முதலீட்டு தொகையும், வட்டியும் கிடைக்கவில்லை. என்ன செய்வது?
சிவராமன், சென்னை.
எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட, கடன் வழங்கிய 15 நிறுவனங்களுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டிய நிறுவனம் இது. என்.சி.டி., முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர ஆறு மாத அவகாசம் கேட்டது. அவர்கள் காலண்டரில், இன்னும் ஜூன் 30, 2021 வரவில்லை போலிருக்கிறது.
சம்பளம் வாங்கும் போது, சிறிது தொகை வரியாக எடுக்கப்படுகிறது. தனியாக சேமிப்பு இருந்தால் அதற்கும் வரி கட்ட வேண்டுமா?
ரமேஷ், செய்யூர்.
நீங்கள் குறிப்பிடுவது, புரொபஷனல் வரி. அதற்கும், சேமிப்புகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்குச் செலுத்தப்பட வேண்டிய வரிக்கும் வித்தியாசம் உள்ளது. பல மாநிலங்களில், நீங்கள் மாதச் சம்பளக்காரராக இருந்தாலே, சம்பளத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை, ‘புரொபஷனல் வரி’ என்று பிடித்தம் செய்யப்பட்டு, அந்தந்த மாநில அரசுக்குப் போகும். தனியாக சேமிக்கும் போது, 40 ஆயிரம் ரூபாய் வரை வட்டிக்கு வரி கிடையாது. அதற்கு மேல் தான் வரி உண்டு.
எல்.ஐ.சி.,யில் பணியாற்றிய நண்பர் ஒருவர் வழிகாட்டியதன்படி, எல்.ஐ.சி., மிட்கேப் பண்டில், 50 ஆயிரம் ரூபாய் என் தாயின் பெயரில் முதலீடு செய்தேன். தற்போது நண்பர் இறந்து விட்டார். எவ்வாறு முதலீட்டை திரும்ப பெறுவது?
முஹம்மது அசாருதீன், ராமநாதபுரம்.
மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்யும்போது, ஒவ்வொரு திட்டத்துக்கும் தனியே, ‘போலியோ’ எண் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் அந்த எண் இருக்கிறதா என்று பார்த்து, நேரடியாக எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு வலைதளத்தையோ, அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு, விசாரியுங்கள். பின்னர், யூனிட்டுகளை விற்பனை செய்யலாம்.இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகாரம் பெற்ற, ‘கிரிப்டோகரன்சி’ அல்லது ‘டிஜிட்டல் கரன்சி’ ஏதாவது உள்ளதா? இதில் முதலீடு செய்யலாமா?
பிரேம் ஜெயராஜ், கன்னியாகுமரி.
தற்போது இல்லை. ஆனால், இன்னொரு விஷயம் நடைபெற்றுள்ளது. கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை சட்டம், இந்த குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதே ஆரோக்கியமான நகர்வு. வளர்ந்து வரும் மெய்நிகர் நாணயச் சந்தையைப் பற்றி தீர விசாரித்து, அதன் நுணுக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் புரிந்துகொண்டு, முழுமையான நெறிமுறைகளை வகுக்கவே, மத்திய அரசு கால அவகாசம் எடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எதிர்காலத்தில், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் மெய்நிகர் நாணயங்கள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒன்றின் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம், ஒரு வங்கியில், 93 பேர் வீட்டுக்கடன் பெற்று, பின்னர், 2019ல் அடைத்துவிட்டோம். நாங்கள் பணிபுரிந்த நிறுவனம், பணியாளர்களின் சம்பளத்தில், 2015ல் ஏப்ரல், மே மாதங்களில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இந்தத் தொகையை திரும்பப் பெற போராடி வருகிறோம். என்ன செய்யலாம்?
இ.பி.பாஸ்கர், திண்டுக்கல்.
சம்பளத்தில் செய்யப்பட்ட பிடித்தத்தை, உங்கள் நிறுவனம் வங்கிக்குச் செலுத்தவில்லை என்றால், உங்களால் வீட்டுக்கடனை அடைத்திருக்கவே முடியாதே? ‘கடன் முடிந்தது’ என்று சொல்லும், நிறைவு சான்றிதழ் உங்களுக்கெல்லாம் வந்துவிட்டது என்றால், பணம் முறையாக போயிருக்கிறது என்று தான் அர்த்தம். அப்படி போகவில்லை என்பது உண்மை என்றால், தமிழக அரசின் கூட்டுறவுத் துறை பதிவாளர் கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|