பதிவு செய்த நாள்
14 நவ2021
19:53
வரி சேமிப்புக்காக செய்யப்படும் முதலீடுகள், வரி சலுகை பலனை மட்டும் அளிக்காமல், செல்வ வளத்தை உருவாக்கவும் உதவும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில், இ.எல்.எஸ்.எஸ்., என குறிப்பிடப்படும் ‘ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்’ நிதிகளையும் முக்கிய வாய்ப்பாக பரிசீலிக்கலாம். ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களில் ஒன்றாக அமையும் இ.எல்.எஸ்.எஸ்., நிதிகள் வரிச் சலுகையை அளிப்பதோடு, சம பங்கு முதலீடு பலனையும் பெற வழி செய்கின்றன. இ.எல்.எஸ்.எஸ்., நிதி முதலீடு தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
வரிச் சலுகை:
இ.எல்.எஸ்.எஸ்., நிதியில் செய்யப்படும் முதலீட்டிற்கு வருமான வரி, ‘80 சி’ பிரிவின் கீழ் வரிச் சலுகை கோரலாம். எனினும் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மூன்று ஆண்டு ‘லாக் இன்’ காலம் உண்டு. முன்கூட்டியே தொகையை விலக்கிக் கொள்ள முடியாது. மற்ற நிதிகள் போலவே, ‘குரோத் மற்றும் டிவிடெண்ட்’ வாய்ப்புகள் உண்டு.
எஸ்.ஐ.பி., வழி:
மற்ற மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் போலவே, இந்த நிதியிலும் எஸ்.ஐ.பி., முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்யும் சுமையை இதன் மூலம் பிரித்துக் கொள்ளலாம். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே தொகையை விலக்கிக் கொள்ள முடியும்.
வரி அம்சம்:
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு வரிச் சலுகைக்கு உரியது என்றாலும், இதில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் தொகை வரி விதிப்புக்கு உட்பட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான தொகை எனில், நீண்ட கால மூலதன ஆதாய வரி பொருந்தும். டிவிடெண்ட் தொகை வருமானத்தில் சேர்க்கப்படும்.
இடர் அம்சம்:
இ.எல்.எஸ்.எஸ்., நிதிகள் பிரதானமாக சம பங்குகளில் முதலீடு செய்வதால், சந்தை சார்ந்த இடர் அம்சங்கள் இவற்றில் உண்டு. முதலீட்டாளர்கள் தங்கள் இடர் தன்மைக்கு ஏற்ப நிதியை தேர்வு செய்ய வேண்டும். ‘டெப்ட் பண்ட்’ வகை நிதியை விட, இடர் அதிகம் கொண்டவை என்றாலும், அதற்கேற்ப பலனும் அளிக்க வல்லவை.
தேர்வு எப்படி?
நிதியின் செயல்பாடு, நிதியின் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் நிதியை தேர்வு செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் நிதி இலக்கையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், நிதியின் பலன் உத்தரவாதம் கொண்டது அல்ல என்பதையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|