பதிவு செய்த நாள்
14 நவ2021
21:40
எனக்குப் பின், என் பங்குகளில் உரிமை பெற, ஒவ்வொரு நிறுவனப் பங்குக்கும் ‘நாமினேஷன்’ அவசியமா அல்லது இந்த பங்குகள் இணைக்கப்பட்டுள்ள ‘டீமேட் அக்கவுன்டு’க்கு நாமினேஷன் இருந்தால் போதுமா?
குருமூர்த்தி, சென்னை.
டீமேட் அக்கவுன்டுக்கு நாமினேஷன் இருந்தால் போதும். ஒவ்வொரு நிறுவனப் பங்குக்கும் தனித்தனியே நாமினேஷன் கொடுக்கத் தேவையில்லை. மூன்று பேர் வரை நாமினியாக போடலாம். வரும் 2022, மார்ச் 31க்குள், டீமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நாமினி யார் என்பதை தெரிவிக்க வேண்டும் அல்லது நாமினேஷன் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கான ‘டிக்ளரேஷன்’ படிவத்தை நிரப்பி தர வேண்டும். இல்லையெனில், உங்களது ‘டிரேடிங்’ மற்றும் டீமேட் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது, பங்குச் சந்தை கட்டுப்பாடு வாரியமான ‘செபி!’
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அலுவலர்கள் ஜி.எஸ்.டி., எடுத்து தொழில் செய்யலாமா?
என்.எஸ்.ராமன், தேனி.
தாராளமாகச் செய்யலாம். வேலையில் இருந்தபோது தான், சர்வீஸ் விதிகள் பொருந்தும். ஓய்வுபெற்ற பின், அவை பொருந்தாது. மேலும், நீங்கள் வாங்கும் ஓய்வூதியம் என்பது கடந்த காலப் பணிக்கு நீங்கள் பெறும் உரிமைத் தொகை. சட்டத்துக்குட்பட்ட எந்தத் தொழில் அல்லது வர்த்தகத்திலும் நீங்கள் ஈடுபடலாம். மத்திய அரசுப் பணிகளில் உயர்நிலையில் இருப்பவர்கள், ஓய்வுபெற்ற பின்னர் உடனடியாக தனியார் துறையில் வேலைக்குப் போக முடியாது. இரண்டு ஆண்டுகள் கழித்தே சேர முடியும் என்ற விதி இருக்கிறது. தொழில்களில் ஈடுபடுவதற்கும் இது பொருந்தக்கூடும் என்ற கருத்து இருக்கிறது.
தங்க நகைக் கடனை, ஒரு வங்கியில் இருந்து, குறைந்த வட்டியுடைய இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ள முடியுமா?
ஆர்.பாலசுந்தரம், கோவை.
வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்வது போல், தங்க நகைக் கடனை மாற்றிக்கொள்ள வசதி இல்லை. பணத்தை முழுமையாகச் செலுத்தி, நகையை மீட்ட பின்னே, இன்னொரு வங்கியில் அடமானம் வைக்க முடியும்.
‘மொபைல் ஆப்’களில் பங்குகள் வாங்குவது பாதுகாப்பானதா? தனியாக டீமேட் கணக்கு எங்கு, எப்படி துவங்குவது?
ஜெ.ராஜேந்திரன், திருப்பூர்.
கணினியைப் பயன்படுத்தி பங்குகள் வாங்குவதைப் போன்றே, மொபைல் ஆப்களைப் பயன்படுத்தியும் பங்குகள் வாங்கலாம். பெரிய வங்கிகளும், புரோக்கர்களும் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். மொபைல் சீக்கிரம் ‘கிராஷ்’ ஆகாமல், ‘ஹாங்க்’ ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி பாதுகாப்பு ரீதியாக வேறு பிரச்னைகள் இல்லை. டீமேட் கணக்கு இருந்தால் தான், மொபைல் ஆப்களிலும் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும்.
எனக்கு 68 வயது. என் இரண்டு மகன்கள் நல்ல சம்பளம் வாங்குகின்றனர் . எனக்கு மாதந்தோறும் நிறைய பணம் தருகின்றனர். 3 லட்சம் ரூபாய் வங்கியில் இருக்கிறது. நான் வரி செலுத்த வேண்டுமா?
ஹயாத், வாட்ஸ் ஆப்.
உங்களைப் போன்ற மூத்த குடிமக்கள், ஆண்டு வருவாய் 3லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை. நீங்கள் வங்கியில் போட்டு வைத்திருக்கும் தொகை, ஓராண்டில் ஈட்டித் தரும் வட்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தான், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் வைத்திருக்கும் 3 லட்சம் ரூபாய் அவ்வளவு வட்டி ஈட்டித் தராது. அதனால் வரி செலுத்த வேண்டியதிருக்காது.
அஞ்சலகத் துறையில் ஆயுள் காப்பீடு செய்வது பலன் அதிகமா? எல்.ஐ.சி.,யில் ஆயுள் காப்பீடு செய்வது பலன் அதிகமா?
க.மு.சுந்தரம், சிலமலை.
‘இரண்டு கண்களில் எந்தக் கண் நல்ல கண்?’ என்று கேட்பது போல் இருக்கிறது தங்களது கேள்வி. இரண்டுமே நம்பகத்தன்மையிலும், நீண்ட கால அளவில் போதிய வருவாய் ஈட்டித் தருவதிலும் முன்னணியில் நிற்கின்றன. அஞ்சலக ஆயுள் காப்பீட்டில், ‘பிரீமியம்’ தொகை வெகு குறைவு என்பதோடு, ஒருசில திட்டங்களில் கூடுதல் போனசும் வழங்கப்படுகிறது. எல்.ஐ.சி., திட்டங்களோ, விதவிதமான சந்தை தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தருகிறது. உங்கள் தேவை என்னவோ, அதற்கேற்ப திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் பதிவு செய்யும்போது, ‘முதலீட்டாளர் அரசியல் தொடர்பு உடையவரா – பி.இ.பி.,?’ என கேள்வி கேட்கின்றனரே, எதற்கு?
ஜெயபால், நாவக்குறிச்சி.
பி.இ.பி., என்றால் மத்திய – மாநில அரசுகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகளையோ, மூத்த அரசாங்க, நீதித் துறை, ராணுவ அதிகாரிகளையோ குறிக்கும். அரசு சார்ந்த பெரிய தொழில் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளைக் குறிக்கும். முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் குறிக்கும். 2008ல் செபி, இத்தகைய விபரங்களைத் திரட்டச் சொல்லி உத்தரவிட்டது. அதன் வாயிலாக, அத்தகைய நபர்களின் நிதி முதலீடுகளும், விற்பனைகளும் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும்.
இதன் வாயிலாக, கறுப்பு பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். நீங்கள் அரசியல், நிர்வாக ரீதியாக முக்கிய நபராக இருந்து, கைசுத்தமானவராக இருந்தால், ஒரு கவலையும் இல்லை. பி.இ.பி., என்று வரையறை செய்யப்பட்டாலும், உங்கள் கணக்கு, யார் கண்ணையும் உறுத்தாது.
என் மகன், அவன் வங்கி கணக்கில் இருந்து, மாதா மாதம் என் வங்கி கணக்கிற்கு அவனுடைய சம்பளத்தை அனுப்புகிறான். அந்த வகையில் 13 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. எனக்கு இதனால் பிரச்னை வருமா? என் வயது 72. என்ன பண்ண வேண்டும்? அவன் திருமணத்துக்காக சேமித்த பணம் இது.
எல்.என்.ராதாகிருஷ்ணன், வாட்ஸ் ஆப்.
பரவாயில்லையே, உங்கள் மகன் தங்கக் கம்பியாக இருக்கிறாரே! அவர் உங்களுக்கு தரும் பணம், ‘பரிசு’ என்றே கருதப்படும். அதனால், உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.ஆனால், தொடர்ந்து பெரிய தொகை உங்களுக்கு வந்து கொண்டே இருக்குமானால், அது வருமான வரித் துறையினரது கண்ணை உறுத்தும்.
உங்கள் மகன் வருமானத்துக்கான வழி என்ன என்பதை தோண்ட துவங்குவர். அதனால், அவரது பெயராலேயே ஒரு ஆர்.டி.,யோ., மியூச்சுவல் பண்டு முதலீட்டையோ ஆரம்பிக்கச் சொல்லுங்கள். உபரி பணத்தை இ.சி.எஸ்., வாயிலாக சேமிக்கச் சொல்லுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|