பதிவு செய்த நாள்
21 நவ2021
19:19
குறைந்த வட்டி விகித சூழலில், வைப்பு நிதி வாயிலாக கிடைக்கும் பலனை அதிகரிக்க உதவும் வழிகளை பார்க்கலாம்.
வங்கிகள் வைப்பு நிதிக்கு அளிக்கும் வட்டி விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாக இருக்கிறது. மேலும் அண்மை ஆண்டுகளில் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து வந்துள்ளன. இதனால் வைப்பு நிதி முதலீட்டை பிரதானமாக நாடுபவர்கள் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தாலும், ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு இடையே சமனான அணுகுமுறையை பின்பற்றி வரும் சூழலில், இந்த நிலை மாறலாம் என்கின்றனர்.
இனி வரும் மாதங்களில் வட்டி விகிதம் உயரத் துவங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த பின்னணியில் முதலீட்டாளர்கள் சரியான உத்திகளை பின்பற்றுவதன் வாயிலாக வைப்பு நிதி அளிக்கும் பலனை அதிகரிக்க முடியும்.
மறுமுதலீடு
வைப்பு நிதியில் முதலீட்டை பரிசீலித்துக் கொண்டிருப்பவர்கள், தற்போதைய குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட கால அளவில் முதலீட்டை முடக்குவதை தவிர்த்து, குறைந்த கால முதலீட்டை நாட வேண்டும். இதன் வாயிலாக வட்டி விகிதம் உயரும் போது, அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். ஏற்கனவே முதலீடு செய்துள்ள வைப்பு நிதி தற்போது முதிர்வடையும் நிலையில் இருப்பவர்களும், அந்த தொகையை மறுமுதலீடு செய்வதாக இருந்தால், குறுகிய கால முதலீட்டை நாடுவது பொருத்தமாக இருக்கும்.
வைப்பு நிதி முதலீட்டை படிப்படியாக மேற்கொள்வதன் வாயிலாகவும் வட்டி விகித சூழலுக்கு ஏற்ப பலன் பெறலாம் என்கின்றனர். அதாவது, எல்லா தொகையையும் ஒரே காலத்தில் முதலீடு செய்யாமல், அந்த தொகையை பிரித்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரையான கால அளவில் முதலீடு செய்யலாம்.
அதன் பின், ஒவ்வொரு வைப்பு நிதி முதிர்வடையும் போதும் அதை ஐந்தாண்டுகளுக்கு மறுமுதலீடு செய்யலாம். இவ்வாறு செய்வதன் வாயிலாக, வைப்பு நிதி ஏணியை உருவாக்கி கொண்டு, வட்டி விகிதம் உயரும் போது அதிக பலனையும், மற்ற நேரங்களில் சராசரி பலனையும் பெறலாம்.
மாறும் வட்டி விகிதம்
தற்போது பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மாறும் வட்டி விகிதம் கொண்ட வைப்பு நிதியை அளிக்கின்றன. இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், அடிப்படை வட்டி விகித அளவுகோளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், வட்டி விகித போக்கிற்கு ஏற்ப பலன் பெறலாம்.
தற்போதைய சூழலில் கூட மாறும் வட்டிவிகித வைப்பு நிதி நல்ல பலன் அளிக்கும். ஸ்டேட் வங்கி ஐந்தாண்டுக்கு மேலான வைப்பு நிதி முதலீட்டிற்கு, 5.40 சதவீத வட்டி அளிக்கிறது. வட்டி விகிதம் உயரும் நிலையில் மாறும் வட்டிவிகித வைப்பு நிதி அதிக பலன் அளிக்கும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அதே போல, வட்டி விகிதத்தை மொத்தமாக பெற்றுக்கொள்வதன் வாயிலாகவும் கூடுதல் பலன் பெறலாம். வைப்பு நிதி வாயிலாக மாத வருமானம் எதிர்பார்க்கும் ஓய்வூதியதாரர்கள், அதிக பலனை எதிர்பார்த்தால், வைப்பு நிதிகளுக்கு மாற்றாக, ஏழு ஆண்டு காலத்திற்கான ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித பத்திரங்களை நாடலாம்.
இந்த பத்திரங்கள் பாதுகாப்பானவை என்பதோடு, வைப்பு நிதியை விட கூடுதல் பலன் அளிக்க வல்லவை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|