பதிவு செய்த நாள்
21 நவ2021
21:06
மகன் தந்தைக்குக் கொடுக்கும் பணம், ‘பரிசாக’ கருதப்படும்; வரி செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளீர்கள். லாட்டரியில் பரிசாக விழுந்த பணத்திற்கும் வரி செலுத்த வேண்டாமா?
எம். சரவணன், ராஜபாளையம்.
இரண்டுமே ஒப்பிட முடியாத இரு வேறு விஷயங்கள். லாட்டரியிலோ, கேம் ஷோவிலோ, வேறு போட்டிகளிலோ 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பரிசுத் தொகை கிடைத்தால், முதலில், அதற்கு, 31.20 சதவீதம் டி.டி.எஸ்., உண்டு. இதை பரிசு வழங்கும் நிறுவனமே, கழித்துக் கொண்டு தான் மீதத்தை வெற்றியாளருக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும், இந்தத் தொகைக்கு வருமான வரியில், எந்தவிதமான வரி விலக்கும் கிடையாது. அதை ‘இதர வழிகளில் வருவாய்’ என்று காண்பித்து, 31.20 சதவீத வரி செலுத்த வேண்டும். கார், வீடு போன்ற பொருட்கள் பரிசாக கிடைத்தால், அதன் சந்தை விலையில் 31.20 சதவீதத்தை, வெற்றியாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டே, அப்பொருட்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
கடந்த 2018ல், வீட்டு அடமானக் கடனாக, ஒரு நிறுவனத்தில் 7.50 லட்சம் ரூபாயை, 12.20 சதவீத வட்டியில் பெற்றேன். பின்னர் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்த போது அதற்கேற்ப கடனுக்கான தவணைக் காலத்தை உயர்த்தினார்கள். ஆனால் வட்டி விகிதம் குறைந்த பின்னர், வட்டியை குறைக்காமல் உள்ளனர். இது சம்பந்தமாக கிளை அலுவலகத்தில் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. என்ன செய்ய?
ஸ்வஸ்திக் மணி, மின்னஞ்சல்.
வட்டியை உயர்த்தும்போது உடனடியாக உயர்த்தும் நிறுவனங்கள், குறையும்போது, அதன் பலனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை தான் வட்டியை மாற்றியமைப்பர்.
நீங்களே வட்டியைக் குறைத்துக் கொள்வதற்கு, மீதமிருக்கும் கடன் தொகையில் 0.50 சதவீதம் ‘கன்வர்ஷன் கட்டணம்’ செலுத்த வேண்டும்.இன்றைக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், வங்கியே வட்டியைக் குறைக்கும் வரை காத்திராமல், ‘கன்வர்ஷன் கட்டணத்தை’ செலுத்தி, வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’ வசதியைக் கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.
ராதிகா சிவகுமார், வாட்ஸ் ஆப்.
மத்திய – மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களிலோ, கருவூல பில்களிலோ நம்மைப் போன்ற சாதாரணர்களால் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. மியூச்சுவல் பண்டுகள் வழியாகவோ, ஒருசில புரோக்கிங் நிறுவனங்கள் வழியாகவோ தான் இதுநாள் வரை முதலீடு செய்ய முடிந்தது. தற்போது, பொதுமக்களும் ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’ வலைதளத்தில் பதிவு செய்த, புதிய கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியான கடன் பத்திரங்களையும் செகண்டரி சந்தையில் வாங்க முடியும்.
முதிர்வு காலம் வரை காத்திருப்பதன் வாயிலாக, உரிய வருவாயைப் பெற முடியும். கடன் பத்திரங்கள் நீண்டகால முதலீட்டுக்கு உகந்தவை. பத்திரமானவை. இதுநாள் வரை சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, இப்போது கிடைத்திருக்கிறது என்பது தான் இதில் முக்கியம்.
ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாயை பென்ஷனாக பெறுபவர்கள், நிரந்தர வைப்புத் தொகைக்காக பெறும் வட்டிக்கு டி.டி.எஸ்., பிடிக்காமல் இருக்க, 15 எச்., படிவம் கொடுக்கத் தகுதியற்றவர்கள் என்கிறார்களே? இது சரிதானா?
என்.கந்தசாமி, மதுரை 17.
வரி விலக்கு வரம்புக்குள் தான் ஆண்டு வருவாய் இருக்கிறது, அதனால் டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டாம் என்று வங்கிக்கு தெரிவிக்கவே, நீங்கள் 15 எச்., படிவத்தைக் கொடுப்பீர்கள். மூத்த குடிமக்களுக்கு வரிவிலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய். உங்களுக்கு பென்ஷன் 2.5 லட்சம் என்றால், மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டாம்.
நீங்கள் வரிவிலக்கு வரம்புக்குள் தான் இருக்கிறீர்கள் என்பதை வங்கிக்கு தெரிவித்து, 15 எச். படிவத்தைக் கொடுங்கள். ஆண்டு வட்டித் தொகை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்குமானால், நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
என் உடன் பிறந்தவர்கள் 6 பேர். 3 ஆண்கள், 3 பெண்கள். பெற்றோர் இறந்துவிட்டனர். அப்பாவிற்கு சொந்தமான வீட்டில் பெண்களும் சம பங்கு கேட்கின்றனர். இது நியாயமா?
என். பாஸ்கரன், மேலுார்.
நியாயமே. 1956ம் ஆண்டின் ஹிந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் பிரிவு 6, 2005ம் ஆண்டில் திருத்தப்பட்டது. அந்த திருத்தத்தின்படி, மூதாதையர்களின் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. ஒரு தந்தையின் சொத்தில் மகனுக்கு இருக்கும் அதே உரிமை, மகளுக்கும் இருப்பதையே இந்தச் சட்ட திருத்தம் உறுதி செய்கிறது.
தற்போது எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஏப்ரல் 2022ல் அது முடிகிறது. 50 ஆயிரம் வரை முதிர்வு தொகை வரும். அதை ஆர்.இ.ஐ.டி.,யில் முதலீடு செய்யலாமா, அரசு பாண்டுகளில் முதலீடு செய்யலாமா?
ஜெ.செல்வக்குமார், கோவை.
ஏப்ரல் 2022க்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. அதற்குள் பல விஷயங்கள் நடைபெறலாம். இந்தியாவில் வட்டி விகிதங்கள் உயரலாம். ஐரோப்பாவில் தற்போது மீண்டும் கொரோனா அடுத்த அலை பற்றிய பயம் பெருகியுள்ளதால், பங்குச் சந்தைகள் தடுமாறுகின்றன. இந்நிலை இந்தியாவுக்கு வந்தாலும் வரலாம்.
சீனப் பொருளாதாரம் என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. கட்டுமான நிறுவனங்களைக் காப்பாற்ற சீன அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. அந்த நிறுவனங்களின் சரிவு, படிப்படியாக உலகச் சந்தையைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.பணம் வந்தால், அதைப் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.
சின்ன முதலீட்டாளர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. மூலதனத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 5 மாதங்கள் கழித்து இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph:98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|