பதிவு செய்த நாள்
16 டிச2021
21:39
மும்பை:கடந்த நவம்பரில், துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்திய நிறுவனங்களில், 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, இரு மடங்கு அதிகம்.புதிய வர்த்தகங்களுக்கு, துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை நிதியுதவி செய்கின்றன. இடர்பாடு அதிகம் உள்ள இத்தகைய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, வளர்ச்சிப் பாதையில் தொழில் துறை செல்வதை குறிக்கிறது எனலாம்.
இது குறித்து எர்னஸ்ட் யங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த நவம்பரில், துணிகர முதலீட்டு நிதியங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை, 102 ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய நிறுவனங்களில், 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
இது, 2020, நவ.,ல் மேற்கொள்ளப்பட்ட, 26 ஆயிரம் கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகம். எனினும், அக்.,ல் திரட்டப்பட்ட 98 ஆயிரம் கோடி ரூபாயை விட குறைவாகும். நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில், ஏப்ரல் – நவம்பர் வரை 5 லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய்க்கு இத்தகைய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது, 2020ம் ஆண்டின் சாதனை முதலீட்டை விட, 53 சதவீதம் அதிகம்.நவம்பரில், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.17 ஒப்பந்தங்களில், தலா, 750 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடர்ந்து, மின்னணு வர்த்தக நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘என்கோரா டிஜிட்டல்’ நிறுவனத்தில், ‘அட்வென்ட்’ செய்த, 11ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு; ‘டிரீம் 11’ நிறுவனத்தில் ‘பால்கன் எட்ஜ், டி.பி.ஜி.,’ உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக மேற்கொண்ட, 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை எனலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|