பதிவு செய்த நாள்
19 டிச2021
21:55
நீண்ட காலமாக நிலவிய குறைந்த வட்டி விகித சூழல் மாறுவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ள நிலை பற்றி ஒரு பார்வை
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி அண்மையில், ‘பேஸ் ரேட்’ அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வங்கி துறையில் இந்த அறிவிப்பு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக நிலவி வரும் குறைந்த வட்டி விகித சூழல் மாறத் துவங்கியிருப்பதற்கான அறிகுறியாகவும் இந்த நிகழ்வு அமைகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என அறிவித்த நிலையில், ஸ்டேட் வங்கி பேஸ்ரேட் கடன் விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வட்டி விகித மாற்றம்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த வட்டி விகித சூழல் நிலவி வருகிறது. வட்டி விகிதத்திற்கு அடிப்படையாக அமையும் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வந்தாலும், கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பின் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருந்து வருகிறது.
இதன் காரணமாக வட்டி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டேட் வங்கி பேஸ்ரேட் கடன்களுக்கான வட்டி விகிதத்தை லேசாக உயர்த்தியுள்ளது.மேலும், 2 கோடி ரூபாய்க்கு மேலான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. வேறு சில வங்கிகளும் குறிப்பிட்ட பிரிவு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கை வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்படலாம் என்பதை உணர்த்துவதாக கருதப்படுகிறது. பேஸ்ரேட் என்பது பழைய வட்டி விகித முறையாகும்.இந்த முறையில் கடன் பெற்றவர்களுக்கான மாதத் தவணை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் தொடர்ச்சியாக எம்.சி.எல்.ஆர்., உள்ளிட்ட வட்டி விகிதங்களும் வரும் மாதங்களில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக குறைந்த வட்டி விகித நிலை மாறி, கடன்களுக்கான வட்டி விகிதம் உயரலாம்.
பொருளாதார காரணங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போக்கிலும் மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியிருப்பது, உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதன் அடையாளமாக கருதப்படுகிறது.
இந்திய பொருளாதாரமும் மீட்சி கண்டு வருகிறது. மேலும் கொரோனா புதிய உருவாற்றத்தின் தாக்கம் மோசமாக இல்லை எனில், சர்வதேச பொருளாதாரம் முன்னேற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிப்பது நுகர்வோர் விலை பட்டியலையும் பாதிக்கும் என்பதால், வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்கின்றனர்.
வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு இருப்பது, வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக அமையும். நீண்ட காலமாக வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்து வந்த நிலை மாறுவது, வைப்பு நிதிகளுக்கான பலனை உயர்த்தும்.
அதே நேரத்தில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வது, கடனுக்கான தவணையை அதிகரிக்கச் செய்யும்.முதலீட்டாளர்கள் மற்றும் கடன் பெற்றவர்கள் என இரு தரப்பினருமே, வட்டி விகிதம் மாறும் சூழலுக்கு ஏற்ப தங்கள் உத்திகளை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|