பதிவு செய்த நாள்
22 டிச2021
21:20
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, புத்தாண்டிலிருந்து, ‘டெபிட்’ கார்டு மற்றும் கிரெடிட்’ கார்டு வாயிலாக பொருட்கள் அல்லது சேவையை வாங்குவதற்கான பணம் செலுத்தும் முறை மாற உள்ளது.
இந்நிலையில், புதிய முறைக்கு மாறுவதற்கு, கூடுதலாக ஆறு மாத காலம் அவகாசம் வழங்குமாறு, ரிசர்வ் வங்கியை, டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் துறையை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ரிசர்வ் வங்கி, கார்டுதாரர்களின் தரவுகளை பாதுகாக்கும் வகையில், ‘டோக்கனைசேஷன்’ குறித்த விதிகளை அண்மையில் அறிவித்தது. இது வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
இதனையடுத்து, இனி கார்டுதாரர்கள், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு சம்பந்தமான தரவுகளை மூன்றாம் தரப்பு செயலிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை இருக்காது.தற்போது செயலி வாயிலாக ஒரு பொருளையோ, சேவையையோ பெறும்போது, அதன் செயலியில் நம்முடைய கார்டு குறித்த தரவுகள் சேமிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.இதை தவிர்ப்பதற்காக, இனி மாற்றுக் குறியீடான ‘டோக்கன் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதன்படி, புத்தாண்டிலிருந்து கார்டு வழங்கும் வங்கி அல்லது, கார்டு நெட்வொர்க் நிறுவனம் தவிர, வேறு எந்த அமைப்பும் கார்டுகளின் தரவுகளை சேமிக்க முடியாது. இவற்றில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளும் நீக்கப்படும்.
இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, டோக்கனைசேஷனுக்கான கால அவகாசத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், புதிய வசதியை வழங்குவதற்கு போதுமான அவகாசம் இல்லை என்றும், வாடிக்கையாளர்களும் இது குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ளவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.வங்கிகள் மற்றும் நெட்வொர்க் நிறுவனங்கள், டோக்கனைசேஷனுக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டன. இருப்பினும், வணிகர்கள் தரப்பில் இன்னும் தயாராகவில்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|