பதிவு செய்த நாள்
28 டிச2021
09:37
மும்பை : ‘ஆர்.பி.எல்., வங்கியின் நிதி நிலவரம் திருப்திகரமாக உள்ளதால், வாடிக்கையாளர்கள் வதந்தியை நம்ப வேண்டாம்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த, ஆர்.பி.எல்., எனப்படும் ரத்னாகர் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான விஷாவிர் அஹூஜா, திடீரென பதவி விலகினார்.அவர், ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி விலகியதாக தகவல் கசிந்தது. இதையடுத்து, வங்கியின் இடைக்கால நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ராஜிவ் அஹூஜாவை, ரிசர்வ் வங்கி நியமித்தது. அத்துடன், வங்கியின் நிர்வாகக் குழுவில் கூடுதல் இயக்குனராக, ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் நியமிக்கப்பட்டார்.
‘ஆர்.பி.எல்., வங்கியின் நிதி நிலவரம் சரியில்லாததே ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு காரணம்’ என, ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து, ஆர்.பி.எல்., வங்கி வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து, முதலீடுகளை திரும்பப் பெறத் துவங்கினர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆர்.பி.எல்., வங்கியின் மூலதனம் மற்றும் நிதி நிலவரம் திருப்திகரமாக உள்ளது. கடந்த செப்., உடன் முடிந்த அரையாண்டில், வங்கியின் மூலதன இருப்பு விகிதம், 16.33 சதவீதம்; ஒதுக்கீட்டு விகிதம், 76.6 சதவீதம் என, போதிய அளவிற்கு உள்ளது.பணப்புழக்க விகிதம், ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டதை விட, 53 சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே, ஆர்.பி.எல்., வங்கி குறித்த யூகச் செய்திகளை நம்பி, எத்தகைய முடிவையும் முதலீட்டாளர்கள் எடுக்க வேண்டாம்.வங்கி நிர்வாகத்திற்கு கூடுதல் வலு சேர்க்கவே புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|