பதிவு செய்த நாள்
01 ஜன2022
01:06
புதுடில்லி:செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை தயாரிப்பதற்கான ஆலையை அமைக்கும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து, இன்று முதல் பெறத் துவங்கி இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின், உலகம் முழுக்க செமிகண்டக்டர் சிப்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. அதேசமயம், வினியோகம் சரிவை கண்டுள்ளது. இதனால் வாகன தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்தியாவிலும், செமிகண்டக்டருக்கான தேவை அதிகமிருப்பினும், போதுமான சப்ளை இல்லை. இதையடுத்து, மத்திய அரசு, இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான டிஸ்பிளே ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊக்கச் சலுகை திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.
தற்போது சலுகை திட்டத்தை அறிவித்த சூட்டோடு அடுத்தகட்டமாக, ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களையும் பெற துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. செமிகண்டக்டர் ஆலைகள் துவக்குவதில் அரசு தீவிரமாக இருக்கிறது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், “உலகளவிலான செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தயாரிப்பை துவங்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். மேலும், இது சரியான சமயமும் ஆகும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக, புதிய இணையதள வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. அதன் வாயிலாக, இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், எளிதாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|