பதிவு செய்த நாள்
07 ஜன2022
23:21
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யில், மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ள வசதியாக, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மாற்றங்களைச் செய்து வருகிறது.
இது குறித்து, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:நாங்கள் இப்போது அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.முக்கியமாக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை, மத்திய அரசு விற்பனை செய்ய இருப்பதால், அதை எளிதாக்கும் பொருட்டு, திருத்தப்பட்ட அன்னிய நேரடி முதலீடு கொள்கையை கொண்டுவர இருக்கிறோம்.
இது குறித்து, நிதி சேவைகள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாக துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.இதுவரை இரு முறை ஆலோசனை கூட்டங்கள் என்னளவில் நடத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து, இந்த துறைகள் அனைத்தும் ஒருமித்தமுடிவுக்கு வந்துள்ளன. அதனால், கொள்கையில் மாற்றங்களை சேர்த்து வருகிறோம். இதன் பின், அவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்.
தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, இன்சூரன்ஸ் துறையில் ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றின் முன் அனுமதி பெறாமலே, ஆட்டோமேட்டிக் வழியில் 74 சதவீதம் வரை, அன்னிய முதலீட்டை மேற்கொள்ளலாம்.ஆனால், இந்த விதி எல்.ஐ.சி.,க்கு பொருந்தாது. ஏனெனில் எல்.ஐ.சி.,க்கு என தனியான சட்டம் உள்ளது.
இதன்படி, அன்னிய நேரடி முதலீட்டுக்கு எல்.ஐ.சி.,யில் இடம் இல்லை. எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|