பதிவு செய்த நாள்
29 ஜன2022
18:32
புதுடில்லி:ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பழைய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை, இந்தியாவில் 2025ல், 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கமான ஐ.சி.இ.ஏ., மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.சி., ஆகியவை இணைந்து வழங்கியிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் பழைய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் 2025ல், இந்த சந்தை 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட 2.50 கோடி ஸ்மார்ட்போன்கள், சராசரியாக 6,900 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வர்த்தகம் 17 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பழைய போன்களின் விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து, மின்னணு கழிவுகள் குறைந்து வருகிறது என்பது ஒரு சாதகமான விஷயம்.
பழைய ஸ்மார்ட் போன் விற்பனையை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 95 சதவீத போன்கள் அப்படியே கைமாற்றப்படுகின்றன. 5 சதவீத போன்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டோ அல்லது பழுது நீக்கப்பட்டோ விற்பனை செய்யப்படுகின்றன.பழைய ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக லேப்டாப், ஸ்மார்ட்வாட்சுகள், கேமிங் கன்சோல்கள், கேமராக்கள் ஆகியவற்றின் விற்பனையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பழைய ஸ்மார்ட்போனை வாங்குபவர்களில் 78 சதவீதம் பேர், மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். 18 சதவீதம் பேர், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மாதச் சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|