பதிவு செய்த நாள்
11 பிப்2022
19:34
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக, மீண்டும் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா
இது குறித்து, டாடா சன்ஸ் தெரிவித்துஉள்ளதாவது:நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டு செயல்பாடுகள் மதிப்பாய்வு செய்யப் பட்டு, நிறுவனத்தின் தலைவராக, மீண்டும் சந்திரசேகரனை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக, நிறுவனத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, கூட்டத்தில் தனது திருப்தியைத் தெரிவித்துஉள்ளார், ரத்தன் டாடா.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சந்திரசேகரனையே நீட்டிக்குமாறும் அவர் பரிந்துரைத்து உள்ளார்.இதனையடுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக, சந்திரசேகரனை தலைவராக மீண்டும் நியமிக்க இசைவு தெரிவித்துஉள்ளனர்.
பதவி நீட்டிப்பு குறித்து சந்திரசேகரன் கூறியிருப்பதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தை வழிநடத்தியது ஒரு பாக்கியம். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சந்திரசேகரன், கடந்த 2016ம் ஆண்டில், டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இணைந்தார். ஜனவரி 2017ல் தலைவராக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 2017ல் பதவி ஏற்றார்.மேலும் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.
‘ஏர் இந்தியா’இதற்கு முன், டாடா சன்ஸ் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி உடனான சட்ட போராட்டத்தின் போது, அதை சமாளிக்கவும், நிறுவனத்தை வெற்றிகரமாக வழி நடத்தவும், நிறுவனத்துக்கு மிகவும் உதவியாக சந்திரசேகரன் இருந்துள்ளார். அடுத்து, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை கையகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.இத்தகைய காரணங்கள் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்படுவதற்கு உதவியாக இருந்துள்ளது என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|