பதிவு செய்த நாள்
23 பிப்2022
21:29
மும்பை:‘என்.எப்.டி., கிரிப்டோகரன்சி’ உள்ளிட்ட, மெய்நிகர் டிஜிட்டல் முதலீடுகள் குறித்த விளம்பரங்களில், ‘ஒழுங்குபடுத்தப்படாதது, அதிக அபாயம் கொண்டது’ எனும் எச்சரிக்கைகளை விளம்பரதாரர்கள் சேர்க்க வேண்டும் என, ‘இந்திய விளம்பர தரநிலை கவுன்சில்’ தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறையை, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து விளம்பரதாரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.மேலும், இத்தகைய முதலீட்டுக்கான பரிவர்த்தனைகளில் ஏற்படும் இழப்புகளுக்கு முறையிட, எந்த ஒழுங்குமுறை அமைப்பும் கிடையாது என்பதையும் விளம்பரதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என, கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக, சர்ச்சைக்குரிய இத்தகைய முதலீடுகள் குறித்த விளம்பரங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த துறை சம்பந்தப்பட்டவர்கள், அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றுடன் ஆலோசித்து, வழிகாட்டும் முடிவை கவுன்சில் எடுத்துள்ளது.
இது குறித்து கவுன்சிலின் தலைவர் சுபாஷ் காமத் கூறியதாவது:மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் புதிதாக வளர்ந்து வரும் ஒரு முதலீட்டு வாய்ப்பு. எனவே அதன் அபாயங்கள் குறித்து நுகர்வோர் அறிந்து, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இத்தகைய திட்டங்கள் மற்றும் சேவைகள் சம்பந்தமான விளம்பரங்களுக்கு வழிகாட்டுதல்கள் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.விளம்பரதாரர்கள், இந்த பொறுப்பு துறப்பு அறிவிப்பை, விளம்பரங்களுக்கான அளவில், ஐந்தில் ஒரு பகுதி அளவுக்கு இருக்குமாறு பிரசுரிக்க வேண்டும் என்றும்; வீடியோ எனும்பட்சத்தில், விளம்பரத்தின் முடிவில் வெளியிட்டு, அதை வாசிக்க வேண்டும் என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியா, இத்தகைய முதலீடுகளை இன்னும் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், இம்முதலீடுகளிலிருந்து பெறப்படும் வருவாய்க்கு வரி விதித்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, இத்தகைய முதலீடுகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|