பதிவு செய்த நாள்
06 மார்2022
22:22
மூத்த குடிமகனான நான், ‘பிரதம மந்திரி வயா வந்தனா யோஜனா’வில் டிபாசிட் செய்துள்ளேன். எல்.ஐ.சி., – ஐ.பி.ஓ.,வில் சலுகை விலையில், எனக்கு பங்குகள் ஒதுக்கப்படுமா?
எஸ்.ரதன், மின்னஞ்சல்.
மூத்த குடிமக்களுக்கான இந்த ஓய்வூதிய பாலிசியை, எல்.ஐ.சி., தான் வழங்குகிறது. அதனால், பாலிசி வைத்திருப்பவர்களுக்கான ஒதுக்கீட்டில், நீங்களும் சலுகை விலையில், எல்.ஐ.சி., பங்குகளுக்காக மனு செய்யலாம்.இன்றைக்கு இருக்கும் போர்ச் சூழலில், எல்.ஐ.சி., பங்குச் சந்தைக்கு வருமா, வராதா என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. போர் முடிவுக்கு வந்தால் தான், பங்குச் சந்தை நிம்மதி அடையும். அதுவரை, எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்றே தெரிகிறது.
பிறர் உதவியின்றி, ‘டிமேட்’ கணக்கு துவக்குவது எப்படி?
மூவேந்திரா, மின்னஞ்சல்.
டிமேட் கணக்கு என்பது, வெறும் தபால் பெட்டி மாதிரியானது என்று, கடந்த வாரமே சொன்னேன். இந்தியாவில், இரண்டு டிமேட் பாதுகாவலர்கள் உள்ளனர். ஒன்று, என்.எஸ்.டி.எல்., மற்றொன்று, சி.டி.எஸ்.எல்., இவர்கள் பல்வேறு வங்கிகளுக்கும், பங்குச் சந்தை நிறுவனங்களுக்கும், டிமேட் கணக்கை துவங்கித் தர அனுமதி அளித்துள்ளனர். அவர்களுக்கு, ‘டிபாசிட்டரி பார்டிசிபென்ட்ஸ்’ என்று பெயர். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அவர்களையே கேட்டுப் பாருங்கள். அவர்களே, உங்களுக்கு டிமேட் கணக்கையும், டிரேடிங் கணக்கையும் துவக்கிக் கொடுப்பார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்ய, இது உகந்த நேரமா?
கீர்த்தனா நவீன், மின்னஞ்சல்.
தங்கத்தை விட, தரமான முதலீடாக பங்குச் சந்தையும், மியூச்சுவல் பண்டுகளும் மாறியுள்ளனவே, பார்க்கவில்லையா? இந்த ஆண்டு முழுவதுமே, பங்குச் சந்தை முதலீடு செய்வதற்கு உகந்ததாக இருக்கும் போல் தெரிகிறது. மாதாமாதம், கொஞ்சம் தொகையை நல்ல பங்குகளிலும், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் முதலீடு செய்து வாருங்கள். தங்கம் ஈட்டும் வருவாயை விட, பங்குகள் கூடுதல் லாபம் ஈட்டித் தரும்.
நேரடியாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?
பிரகாஷ், மின்னஞ்சல், ஏ.பி.மோஹனதாஸ், வாட்ஸ் ஆப்.
எந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனத்தின் வலைதளத்தில் போய் பதிவு செய்துகொண்டு, பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இணைத்துக்கொண்டு, நேரடியாக முதலீடு செய்வதே சிறந்த வழி. அல்லது, பல மியூச்சுவல் பண்டுகள் ஒருங்கிணைந்து, எம்.எப்.யுடிலிட்டீஸ் என்ற பெயரில் நடத்தி வரும், https://www.mfuindia.com/ என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொண்டும் முதலீடு செய்யலாம். இப்போது, பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவன வலைதளங்களும், மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு உதவுகின்றன. இவை எல்லாம் உண்மையில் ‘நேரடி’ இல்லை. இவர்களும், மியூச்சுவல் பண்டு விநியோகஸ்தர்களே என்பதால், சிறிதளவேனும் விநியோகஸ்தருக்கான கட்டணம் இருக்கும்.
விவசாயத்துக்கான ‘டிராக்டர்’ வாங்க விரும்புகிறேன். அதற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? எத்தனை சதவீதம்?
சந்திரன், விவசாயி, வாட்ஸ் ஆப்.
உண்டு. டிராக்டரின் திறனுக்கு ஏற்ப, இது மாறுபடுவதாகத் தெரிகிறது. விவசாய எந்திரங்கள் மீது, 12 சதவீத வரியும், விவசாய கருவிகள் மீது, 28 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. டிராக்டர், விவசாய எந்திரங்களின் கீழ் தான் வரும்.ஒரு நாடு, இன்னொரு நாடு மீது பொருளாதார தடை விதிப்பதாக சொல்கிறதே; இந்த பொருளாதார தடை என்றால் என்ன என்பது குறித்து விளக்கவும்.
சா.முத்து, கோவை.
தவறு இழைக்கும், மனித குலத்துக்கே எதிராக செயல்படும் நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவர பயன்படும் ஓர் அணுகுமுறை தான், பொருளாதார தடை என்பது. உதாரணமாக, தற்போது ரஷ்யா மீது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள், விதவிதமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
பல நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களுக்குள் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள ‘ஸ்விப்ட்’ என்ற சுலபமான வழிமுறையை வைத்துள்ளன. தற்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஸ்விப்ட்’ வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு வெளிநாட்டு பணம் வராது. அவர்களாலும் வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்ப முடியாது. இந்த அடிப்படை வழியை மறித்துவிட்டதால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதிகள் பாதிக்கப்படும். அதை நம்பியுள்ள பல்வேறு உற்பத்தி செயல்பாடுகளும், துறைகளும் முடங்கிப் போகும். இதன் வாயிலாக, வேலைவாய்ப்புகள் சிதைந்து, உள்நாட்டில் வறுமை தலைதுாக்கும்.போருக்குப் பின், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதம் சரிந்துபோகும் என்று, முக்கியமான கணிப்புகள் சொல்கின்றன. அதாவது, வரம்பு மீறும் நாடுகளை, ஆயுதத்தால் அடிப்பது ஒருவிதமான போர். அடிவயிற்றில் அடிப்பது தான் பொருளாதாரப் போர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்துகொண்டே இருக்கிறார்களே? சரிவுக்கு இதுவும் காரணமா?
பரத் ரங்கராஜன், கோடம்பாக்கம்.
இருக்கலாம். போர், அமெரிக்க வட்டி உயர்வு பற்றிய அறிவிப்பு ஆகியவை வருவதற்கு முன்பே, அவர்கள் விற்பனை செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால், முன்பெல்லாம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினால், பங்குச் சந்தைகள் படு பாதாளத்துக்கு விழும். இம்முறை அப்படி நடைபெறவில்லை. இந்தியாவின் சிறு முதலீட்டாளர்கள் தான், பங்குச் சந்தையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இன்னொரு வகையில் சொல்வதானால், பங்குச் சந்தையைப் பற்றிய புரிதல், இளம் தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளதன் நல்விளைவு இது. டிசம்பர் 2021 இறுதியில், 4.91 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி., வழியாக, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை, ஜனவரி 2022 இறுதியில், 5.05 கோடியைத் தொட்டுள்ளது. முதலீடு செய்வதில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சியே இதற்குக் காரணம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph:98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|