பதிவு செய்த நாள்
15 மார்2022
22:12
மும்பை:கடந்த 5 நாட்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தைகள், நேற்று சரிவைக் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள், நேற்று 2.61 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.
உக்ரைன் மீதான போர், இன்னும் ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால், உலக சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின. அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 2018ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக, வட்டிவிகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனாலும், உலக சந்தைகள் பாதிக்கப்பட்டன.
இதன் பிரதிபலிப்பு இந்திய சந்தையிலும் ஏற்பட்டது.இந்தியாவில், ரூபாய் மதிப்பு இழப்பு, அன்னிய முதலீடுகள் வெளியேறுவது ஆகியவை, சந்தையை பாதிப்பதாக அமைந்தன. மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ பிரிவில், ‘டாடா ஸ்டீல்’ அதிக இழப்பை கண்டது.வாகன பங்குகள், குறிப்பாக, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி சுசூகி’ உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்வைக் கண்டன.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 75 நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததை அடுத்து, வாகன துறை ஏற்றம் கண்டது.மும்பை பங்குச் சந்தையில் 2,045 பங்குகள் சரிவைக் கண்டன. 1,342 பங்குகள் ஏற்றம் பெற்றன. 101 நிறுவன பங்குகள் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|