பதிவு செய்த நாள்
04 ஏப்2022
01:13
வங்கிகளில் போடும் ‘டிபாசிட்’பணத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு உள்ளது போல், தனியார் நிதி நிறுவனங்களில் போடும் டிபாசிட் பணத்திற்கு, பாதுகாப்பு உண்டா? எனில் எவ்வளவு?
கே.கந்தசாமி, கோவை.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி வைப்பு நிதிகளுக்கு கொடுப்பது பாதுகாப்பு மட்டுமல்ல; இழப்பீடும் கூட. ஆனால், தனியார் நிதி நிறுவனத்தில் செய்யப்படும் சேமிப்புகளுக்கு எப்படி அரசு பொறுப்பேற்க முடியும்? அதனால், அந்த நிதி நிறுவனங்கள் மூழ்குமானால், இழப்பீடு கிடைக்காது. காவல்துறையில் வழக்குப் பதிய வேண்டியது தான்.
தனியார் துறையினரை நிதி நிறுவனம் நடத்தக் கூடாது என்றோ, வைப்பு நிதி பெறக்கூடாது என்றோ தடை செய்ய முடியாது. இது ஜனநாயக நாடு. அனைவரும் சுயமாகத் தொழில் துவக்க முழு சுதந்திரம் உண்டு. விதிமுறைகள், வழிமுறைகள் போன்ற வரையறைகளைத் தான் ஆர்.பி.ஐ., வழங்க முடியும். அவை ஒழுங்காக கடைப்பிடிக்கப்பட்டனவா என்று அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளின் வாயிலாக உறுதி செய்து கொள்ள முடியும்.
இத்தகைய முன்னெச்சரிக்கைகளையும் மீறி, நிதி நிறுவனங்கள் திவால் ஆகலாம். வாடிக்கையாளரான நீங்கள் தான் உஷார் திலகமாக திகழ வேண்டும்.தனியார் நிதி நிறுவனத்தின் பாரம்பரியம் என்ன? எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது? எதில் முதலீடு செய்கின்றனர்? வாராக்கடன் எவ்வளவு? நிர்வாகத் திறன் என்ன என்றெல்லாம் பார்த்து, நம்பிக்கை பெற்றால் மட்டுமே அங்கே பணத்தை போட வேண்டும். வட்டிக்கு மட்டும் ஆசைப்பட்டு, அசலை தொலைத்துவிடக் கூடாது.
என் நண்பனுக்கு வெளிநாட்டில் முதுநிலை கல்வி பயில ஆர்வம். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு பொதுத் துறை வங்கியில் கணக்கு வைத்துள்ளான் என்றாலும், போதிய சேமிப்பு இல்லை. வாடகை வீடு, வேலைவாய்ப்பு இன்மை, சொத்து போன்ற பின்புலம் இல்லாதது ஆகியவற்றால், அவனால் கல்விக் கடன் வாங்க முடியுமா? முடியும் என்றால் எவ்வளவு பெற முடியும்?
சுதாகர் ரவிச்சந்திரன்,வாட்ஸ் ஆப்.
கல்விக் கடன் பெறுவதற்கு, போதுமான சொத்துக்களை காண்பித்த பிறகும், மூன்றாவது நபர் ஒருவரை ‘கேரன்டராக’ அதாவது, உத்தரவாதம் அளிப்பவராக கேட்கும் வங்கிகளும் உள்ளன. ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கச் சொல்லுங்கள். உங்கள் நண்பர் இதுநாள் வரை பெற்று உள்ள மதிப்பெண்களும், கிரேடுகளும், ஒருவேளை எதாவது ஒரு வங்கி மேலாளருடைய கவனத்தை கவரலாம்; கடன் கொடுக்க முன்வரலாம்.
கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கான உரிமை; அதை வங்கிகள் மறுக்கக்கூடாது என்றெல்லாம் நானும் முழங்கத் தான் ஆசைப்படுகிறேன்; யதார்த்தம் அப்படி இல்லை. கல்விக் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலோர் அதைத் திருப்பிச் செலுத்தவில்லை; வாராக்கடன் இப்பிரிவில் அதிகமாக உள்ளது என்பது தான் வங்கித் துறையினர் வைக்கும் வாதம். இறுதியில், இதற்கு வங்கி மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது என்பதால், அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். யாரோ செய்த தவறுகள், இன்றைய மாணவர்களை பாதிக்கிறது என்பது தான் உண்மை!
வீட்டுக் கடன் வரம்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது? வீட்டுச் சொத்து மதிப்பின் அடிப்படையிலா அல்லது விண்ணப்பதாரர் சுயவிபரத்தின் அடிப்படையிலா?
விவேக், கோவை.
விண்ணப்பதாரருடைய நிகர வருமானத்தின் அடிப்படையிலேயே கடன் பெறுவதற்கான வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கினால் தான் கடன் கிடைக்கும். அதில் 50 சதவீதம் வரை, மாதாந்திர தவணைத் தொகை செலுத்த முடியும் என்று கணக்கிடப்படுகிறது.
மனைவி, அப்பா ஆகியோரது மாதாந்திர நிகர சம்பளமும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப் பட்டு, அவர்களையும் இணை கடனாளியாக சேர்த்துக் கொள்ளலாம். நிகர சம்பளம் உயர உயர 50 சதவீதம் வரையிலான வரம்பு என்பது 60 சதவீதம் வரை கூட அதிகமாகலாம். 1 லட்சம் ரூபாய் நிகர சம்பளம் என்றால், அதில் 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் தவணை செலுத்த முடியும். 20 ஆண்டுகால வீட்டுக் கடனுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு 800 ரூபாய் மாதாந்திர தவணைத் தொகை என்றால், 60,000/800 = 75. அப்படியானால், 75 லட்சம் ரூபாய் என்பது வீட்டுக்கடன் வரம்பாக நிர்ணயிக்கப்படும்.இதில் அடமானத்துக்கு வைக்கப்படும் சொத்து என்பது பாதுகாப்புக்கு மட்டுமே.
ஒரு நிதி நிறுவனத்தில், நான் வாங்கிய கடனை கட்டியாகிவிட்டது. ஆனால் சிபிலில் ‘ஆக்டிவ்’ என்றே உள்ளது. சிபிலில் அதை நீக்க நான் என்ன செய்ய வேண்டும்?
கல்யாணசுந்தரம், கோவை.
எந்த நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினீர்களோ, அவர்களைத் தான் நச்சரிக்க வேண்டும். அவர்கள் உங்களது கடன் முடிந்துவிட்டது என்று அந்தக் கோப்பை மூடாமல் வைத்திருக்கக் கூடும். கடன் கட்டி முடித்த விபரங்களைச் சொல்லி, அதற்கு ஒரு ‘நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட்’ கேட்டு வாங்குங்கள். என்.ஓ.சி., கொடுத்த பின்னர், அவர்கள், அதை சிபிலுக்குத் தெரிவிக்காமல் இருக்க முடியாது.அப்படியே தெரிவிக்கவில்லை என்றாலும், நீங்கள், https://myscore.cibil.com/ என்ற வலைதளத்துக்கு சென்று புகார் கொடுத்து, திருத்தம் செய்து கொள்ளலாம்.
நான் பி.இ., பட்டதாரி. தொழில் துவங்க ஆசைப்படுகிறேன். எனக்கு பிரதம மந்திரியின் ‘முத்ரா’ திட்டத்தில் கடன் கிடைக்குமா? அதற்கு என்ன தகுதி இருக்கிறது; நான் என்ன செய்ய வேண்டும்?
கு.சிவலிங்கம், பெரம்பலுார்.
அருகில் உள்ள வங்கி கிளைக்குச் சென்று, முத்ரா கடன் என்று கேளுங்கள். இந்தியாவில் 29 வங்கிகள் வாயிலாக இந்த கடன்கள் கொடுக்கப்படுகின்றன. 50 ஆயிரம் ரூபாய் வரையான கடன் திட்டத்துக்கு ‘சிஷு’ என்று பெயர். 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையான கடன் பெறுவதற்கு, ‘கிஷோர்’; 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையானகடனுக்கு ‘தருண்’ என்று பெயர்.உங்கள் வணிகம் சார்ந்த முழுத் திட்டத்தையும் எழுதிக் கொண்டு செல்லுங்கள். எவ்வளவு கடன் தேவை என்பதை வங்கி அதிகாரிகளிடம் தெரிவியுங்கள்.
அடையாள அட்டை, நிரந்தர முகவரி சான்றிதழ்கள், நிறுவன முகவரி சான்றிதழ், நிறுவனத்தின் பதிவு சான்றிதழ், எந்த வகையான தொழில் நிறுவனம் என்பதற்கான சான்றுகள், சொத்து அறிக்கைகள், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்த சான்றிதழ்களை வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் சமீபத்திய வங்கி பரிமாற்ற சான்றிதழ்கள், தொழில்களுக்காக பயன்படுத்தக் கூடிய வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் விபரங்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கான விண்ணப்பங்களை https://www.mudra.org.in/Home/PMMYBankersKit என்ற வலைதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சுயதொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ--–மெயில்’ மற்றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|