பதிவு செய்த நாள்
15 பிப்2019
23:48
புதுடில்லி:மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம், குறைந்த வட்டியில் வங்கி கடன் வசதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுபடுத்தும் நோக்கில்,அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொத்த வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்களிப்பை, 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.இதையொட்டி, மின் வாகன தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக ஆராய, மத்திய அமைச்சரவை செயலர், பிரதீப் குமார் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் அறிக்கை, கடந்த மாதம், மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.வரி விலக்குஅதில், மின் வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை குறைக்க வேண்டும்; மானியம், குறைந்த வட்டியில் வங்கி கடன் வசதி, சாலை வரி விலக்கு உள்ளிட்ட சலுகை களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசு துறைகளுக்கு, பிரதமர் அலுவலகம் அறிக்கை அனுப்பியது.
குறைப்பு
இதையடுத்து, மத்திய வருவாய் துறை, மின் வாகன உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை குறைப்பது குறித்த கருத்துரையை வழங்கியுள்ளது. இது, உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளின் போட்டியை, மின் வாகனங்கள் சமாளிக்க உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல, மத்திய மின்சார அமைச்சகம், அனைத்து நகரங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில், மின் வாகன, ‘சார்ஜ்’ மையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த சார்ஜ் மையங்களை, தனியார் மற்றும் வர்த்தக கட்டடங்களில் அமைக்க வசதியாக, நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்துள்ளதாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ், சாலை போக்குவரத்து உள்ளதால், மின் வாகனங்களுக்கு, பதிவு கட்டணம், சாலை வரி ஆகியவற்றில் விலக்கு அளிக்குமாறு, ‘நிடி ஆயோக்’ அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.மத்திய கனரக தொழில்கள் துறை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியவையும், மின் வாகனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருகின்றன.
முன்னுரிமை
உயர்மட்டக் குழு பரிந்துரைப்படி, வங்கி கடனுக்கான முன்னுரிமை துறைகளில், மின் வாகனங்களையும் சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மின்சார வாகனங்கள் வாங்க, குறைந்த வட்டியில் வங்கி கடன் கிடைக்கும்.மேலும், மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மின் வாகனங்களின் தயாரிப்பு, விற்பனை, பயன்பாடு என, அனைத்து பிரிவினருக்கும் ஊக்குவிப்பு திட்டத்தில், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது. இதையடுத்து, முறையான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரிக்கும் விற்பனை
இந்தியாவில், 2017- – 18ம் நிதியாண்டில், 56 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகின. இது, 2016- – 17ம் நிதியாண்டில், 25 ஆயிரமாக இருந்தது. இதே காலத்தில், மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை, 23 ஆயிரத்தில் இருந்து, 54 ஆயிரத்து, 800 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், மின்சார கார்கள் விற்பனை, 2,000த்தில் இருந்து, 1,200 ஆக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், உள்நாட்டில், 33 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனையாகின. அவற்றில், இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 20 லட்சம்.
சாதகம் – பாதகம்
பெட்ரோல், டீசல் வாகனங்களை விட, மின்சார வாகனங்கள் விலை, இரு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், நாட்டில் மின் வாகனங்களை, ‘சார்ஜ்’ செய்யும் வசதிகள் போதுமானதாக இல்லை என்பதும், அவற்றின் விற்பனை குறைவாக உள்ளதற்கு காரணம்.
அதேசமயம், இதர வாகனங்களை ஒப்பிடும் போது, மின் வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு, நான்கில் ஒரு பங்கு குறைவாக உள்ளது; அத்துடன், சுற்றுச்சூழல் மாசு பிரச்னை இல்லை என்பதும் சிறப்பம்சமாகும்.
சலுகை மழை
* மின் வாகனம் வாங்க மானியம்
* கடன் வழங்குவதில் முன்னுரிமை
* குறைந்த வட்டி விகிதம்
* சுங்க வரி, ஜி.எஸ்.டி., குறைப்பு
* பதிவு கட்டணம், சாலை வரி விலக்கு
* வாகன நிறுத்துமிட கட்டண சலுகை
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|