பதிவு செய்த நாள்
25 பிப்2020
18:33
ஒரு லட்சம் கோடி ரூபாய் பின்னலாடை வர்த்தகம் என்ற இலக்கை, திருப்பூர் முன்வைத்திருக்கிறது. இதற்கு, தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை போதாது. இந்த இலக்கை அடைய, மொத்தம் 20 லட்சம் தொழிலாளர்கள் அத்தியாவசியமாக இருப்பர். இவர்கள், திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டியதும் முக்கியம்.
ஜவுளித்துறையில், நிலவும், திறன்மிக்க தொழிலாளர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு,'சமர்த்' திட்டத்திற்கான ஒப்புதலை, மத்திய ஜவுளித்துறை, கடந்த, 2017 டிசம்பரில் வழங்கியது. திறன் இந்தியா திட்டம் மூலம், 'சமர்த்' திட்டம் தொடர்பான ஆலோசனைகள், அவ்வப்போது, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள தேவையைக் கருதி, ஒன்பது லட்சம் பேருக்குப் பயிற்சி அளிப்பதே, திட்டத்தின் இலக்காக உள்ளது.ஆடை உற்பத்தி நிறுவனங்களிலேயே பயிற்சி மையங்களை செயல்படுத்தி, ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து வகைப் பயிற்சிகளையும், 40 நாட்களில் அளித்து, தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
திருப்பூரில் 'நிப்ட் டீ' கல்லுாரி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, திறன் பயிற்சி அளித்து, ஆடை தொழில்துறைக்குத் தேவையான திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கி வருவதோடு, அவர்களைப் பின்னலாடை நிறுவனங்களில் பணியமர்த்தியும் வருகிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து, 25 ஆயிரம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க, 'நிப்ட் டீ' கல்லுாரி திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டம், மத்திய ஜவுளித்துறையின் பரிசீலனையில் உள்ளது.'சமர்த்' திட்டத்தில், புதியவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, விண்ணப்பிக்க மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆடை உற்பத்தி சார் தொழில் அமைப்புகள் மட்டும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவைப்படும் புதிய தொழிலாளர் எண்ணிக்கை விவரங்களை சேகரித்து வருகிறது. திருப்பூரில் எந்தெந்த பிரிவுகளில், மொத்தம் எவ்வளவு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்ற பட்டியலுடன், அனுமதி கேட்டு ஜவுளி அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட உள்ளது. முதல்கட்டமாக, 20 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான அனுமதி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக, வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் வர்த்தகப்போட்டியை திருப்பூர் சந்தித்து வருகிறது. திறன் மிக்க தொழிலாளர் பற்றாக்குறையால், உற்பத்தித்திறனில் திருப்பூர் உச்சத்தைத் தொடுவதில்லை. திறன் மிக்க தொழிலாளர் கிடைக்கும்போது, உற்பத்தித்திறன் உயர்வதால், வர்த்தகப் போட்டியை எளிதாக திருப்பூர் சந்திக்க முடியும்.
வேறு மாநில தொழிலாளர் ஏன் அவசியம்!தையல், நிட்டிங், பேட்டர்ன், எம்ப்ராய்டரி, செக்கிங் எனப் பல்வேறு துறைகள், பின்னலாடைத்துறையில் இருந்தாலும், அதற்கு, கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவும் அவசியமாக இருக்கிறது. கணினி சார் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள், தையல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதில்லை.
இதேபோல் தையல் போன்ற நுட்பங்களை அறிந்தோருக்கு, கணினி சார் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. இதுதான், திறன் வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதற்கு முக்கியக்காரணமாக உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பலர், இப்பணிகளை நாடுவதில்லை.திருப்பூருக்கு, வடமாநிலங்கள் உள்ளிட்ட வேறு மாநிலத் தொழிலாளர்களின் தேவை அவசியமாக இருப்பதற்குக் காரணமும் இதுதான். தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், இப்பணியில் ஈடுபட முன்வந்தால், எதிர்காலத்தில் தொழில்முனைவோராலும் எளிதானதாக இருக்கும். திருப்பூர், வேறு மாநிலத் தொழிலாளரை நாட வேண்டிய அவசியமும் இருக்காது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|