பதிவு செய்த நாள்
18 அக்2020
21:57
கொரோனா பாலிசியை புதுப்பித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான மருத்துவக் காப்பீடு பாதுகாப்பிற்கு மாறுவது நல்லது என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், கொரோனா காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பை, பாலிசிதாரர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்க அனுமதி அளித்துள்ளது. மேலும், பாலிசிதாரர்கள், கொரோனா பாலிசிகளை வேறு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள மற்றும் விரிவான மருத்துவக் காப்பீடு பாலிசிக்கு மாறிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்புகள், பாலிசிதாரர்களுக்கு பயன் மிக்கதாக அமைவதோடு, விரிவான மருத்துவக் காப்பீடு பாதுகாப்பை பெறுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர்.
குறுகிய கால பாலிசிகள்
கொரோனா தொற்று உலகை உலுக்கி வரும் சூழலில், கொரோனா தொடர்பான குறுகிய கால பாலிசிகளை அளிக்குமாறு, கடந்த சில மாதங்களுக்கு முன், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், காப்பீடு நிறுவனங்களை அறிவுறுத்தியது.
இதையடுத்து, ஒரே விதமான அம்சங்கள் கொண்ட, ‘கொரோனா கவச் மற்றும் கொரோனா ரக்ஷக்’ ஆகிய இரண்டு பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கொரோனா கவச் பாலிசி, தொற்று பாதிப்பால் ஏற்படும் மருத்துவமனை சிகிச்சைக்கான செலவை எதிர்கொள்ள வழி செய்கிறது. கொரோனா ரக்ஷக் பாலிசி, கொரோனா காரணமாக குறிப்பிட்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரும் போது, அதற்கு ஈடான தொகையை வழங்குகிறது.
இந்த இரண்டு பாலிசிகளுமே குறுகிய கால பாலிசிகளாக வழங்கப்படுகின்றன. மூன்றரை மாதம், ஆறரை மாதம் மற்றும் ஒன்பதரை மாதங்களுக்கு இந்த பாலிசிகளை பெறலாம். கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில், இந்த பாலிசிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் இந்த பாலிசிகளை பெற்றிருக்கின்றனர்.
எனினும், குறுகிய கால பாலிசிகள் என்பதால், இவற்றில் குறைந்த கால அளவிலான பாலிசிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த பின்னணியில், பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள பாலிசிதாரர்களுக்கு வாய்ப்பளிக்க, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
விரிவான பாதுகாப்பு
காப்பீடு ஆணையத்தின் நெறிமுறைகளின் படி, கொரோனா பாலிசியை பாலிசிதாரர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பாலிசியை புதுப்பித்துக் கொள்ளும் போது, 15 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தாமல், பாலிசி தொடரும். ஆனால், பாலிசி முடிவதற்குள் புதுப்பிக்க வேண்டும். பாலிசியை புதுப்பிக்கும் போது, காப்பீடு பாதுகாப்பு தொகையையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
அதிகரிக்கப்படும் தொகைக்கு மட்டும் காத்திருப்பு காலம் பொருந்தும். மேலும், பாலிசிகளை வேறு நிறுவனத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம். விரிவான மருத்துவக் காப்பீடு பாலிசிகளுக்கும் மாற்றிக் கொள்ளலாம்.கொரோனா பாலிசியை புதுப்பிக்க மற்றும் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை, காப்பீடு துறையினர் வரவேற்றுள்ளனர்.
தடுப்பூசி இன்னமும் அறிமுகம் ஆகாத நிலையில், கொரோனா பாதுகாப்பு பாலிசியை புதுப்பித்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த தொற்று மருத்துவக் காப்பீடு பெறுவதன் அவசியத்தை உணரச் செய்துள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விரிவான மருத்துவக் காப்பீடு பாலிசிக்கு மாறுவதும் சிறந்ததாக இருக்கும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.ஏற்கனவே இத்தகைய பாலிசி இல்லாதவர்கள், கொரோனா பாலிசியை புதுப்பிக்கும் போது, மற்ற அம்சங்களையும் பரிசீலித்து விரிவான காப்பீடு பெறுவது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|